Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், செப்டம்பர் 8

கல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி

கல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி


மிழகத்தின் எந்தவித பரபரப்பையும் தன்மேல் பூசிக்கொள்ளாத ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு ஆரம்பபள்ளிக்கூடம் முழுக்க முழுக்க மேம்படுத்தப்பட்டு, தமிழகக் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் நிலையில் நிமிர்ந்து நிற்கிறது என்பதை அறிந்த போது, ஆச்சரியத்தின் எல்லைக்குச் சென்றது உண்மை.

பள்ளி முகப்பு
மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் சாலையில் 5வது கல் தொலைவில் இருக்கும் காரமடை, சிறுமுகைக்குப் பிரியும் நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் அப்பகுதி மக்களால் பெரிதும் புகழ்பெற்ற தென் திருப்பதிக் கோவில் வரும். ஆனால் அதற்கு செல்லும் வழியில் வலதுபுறம் பிரியும் சாலையில் இராமாம்பாளையம் வரவேற்கிறது என்கிறது உறுதியானதொரு வரவேற்பு வளைவு. அதனுள் நுழைந்து சில வீடுகளைத்தாண்டி விவசாய நிலங்களைக் கடந்தால் அடர் நீலம், வெளிர்நீல ஆடை அணிந்து தனக்குள் பொதிந்துகிடக்கும் அதிசயங்களை மௌனமாய்ச் சுமந்து கொண்டு அமைதியாய் வரவேற்கிறது இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி. கல்வி வியாபாரப் போட்டியில் தமிழகத்தின் கல்வி வியாபாரத்தில் நோஞ்சானாய்ப் போட்டியிடும் ஒரு நோஞ்சான் குழந்தையின் அடையாளாமாய் வெளிப்புறத்தில் தெரிகிறது அந்த அரசு ஆரம்பப் பள்ளி.
தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி, ஆசிரியர் திரு. ப்ராங்ளின்

பள்ளி முகப்பை அடையும் போது, பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதியும், ஆசிரியர் ஃப்ராங்ளினும் நம்மை அன்போடு வரவேற்கிறார்கள். முதல் சந்திப்பெனினும், பார்வைகளிலேயே அன்பு வழிந்தோடுகிறது. கடும் போட்டியில் வென்ற நகரத்துச் சாயம் படியாத ஒரு வெள்ளந்தியைப் பாராட்டும்போது கசியும் வெட்கம் போல், அவர்களிருவரும் நம்மைப் பார்க்கும்போது அவர்களிடமிருந்து வழிந்தோடுவதைப் பார்க்க முடிந்தது.

வகுப்பறை

மனதில் பொங்கும் பெருமையோடு அந்த வகுப்பறைக்குள் அழைக்க உள்ளே நுழைந்த போது, அந்த அற்புதச் சூழலை விவரிக்க வார்த்தைகள் போதாது. அந்த வகுப்பறையின் தரமும் வடிவமைப்பும் மூச்சடைக்க வைத்தது

எழுதுபலகை, குடிநீர், முதலுதவிப்பெட்டி

  • பளபளக்கும் தரை,  
  • தரமான பச்சை வண்ணப்பலகை,  
  • வகுப்பறைக்குள்ளே குடிநீர் குழாய்
  • அதில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்,  
  • வெந்நீருக்கென தனித்தனி குழாய்கள்,  
  • தெர்மோகூல் கூரை,  
  • மின்விசிறிகள்
  • உயர்தர நவீன விளக்குகள்
  • கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள்
  • மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை
  • வேதியியல் உபகரணங்கள்,
  • கணித ஆய்வக உபகரணங்கள்,
  • முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்,  
  • மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள்
  • அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி,
  • மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை,
  • அனைவருக்கும் தரமான சீருடை,
  • காலுறைகளுடன் கூடிய காலணி,
  • முதலுதவிப்பெட்டி,
  • தீயணைப்புக்கருவி,
  • உயர்திறன் வாய்ந்த கனிணி,
  • காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்
..... என எல்லாமே தரமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு சேகரித்த பொக்கிஷமாய் அந்தக் கிராமத்துக் குழந்தைகளின் எதிர்காலத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த தயாராக இருக்கிறது.

கணினி உட்பட கல்வி உபகரணங்கள்

இதையெல்லாம் செய்யவைத்தது எந்தக் கல்விக்கொள்கையோ, ஐந்தாண்டுத் திட்டமோ அல்லது பெருங்கூட்டமாய்க்கூடி விவாதித்து எடுத்தமுடிவோ அல்ல. ஒரே ஒரு மனிதன், தன் சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில், சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவுத் திட்டமே

மேசை, பெட்டியுடன் கூடிய நாற்காலி

தான் செய்யும் பணியை ஒரு வழக்கமான பணி என நகர்த்தாமல், அதை உயிராய் நேசித்ததன் விளைவுதான் இது. பாரதியின் அக்னிக்குஞ்சு போல், அவருக்குள் இருந்த மாற்றம் எனும் நெருப்புக்கங்குதான், இன்றைக்கு தமிழகத்தின் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் வண்ணம், ஒரு சாயம் வெளுத்துப்போன உள்ளடங்கிய கிராமத்துப் பள்ளியை உலகத்தரத்திற்கு மாற்றிக்காட்டியுள்ளது.


பில்லூர் அருகே மலைவாழ் மக்கள் பகுதியில் இருந்த ஓராசிரியர் பள்ளி ஆசிரியராக நியமிக்கப் பட்டபோதே, ஃப்ராங்ளின் மிகுந்த சிரத்தையெடுத்து வெறும் பதினேழு பிள்ளைகள் படித்த நிலையில் இருந்து 30 பிள்ளைகளாக உயர்த்தியிருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த ஃப்ராங்கிளின், தனக்குள் இருந்த கனவுத்திட்டத்தை செயல்படுத்த துவங்கினார். ஒரு காலத்தில் நூறு பிள்ளைகள் படித்த அந்தப்பள்ளியில் 5ம்வகுப்பு வரை மொத்தமே வெறும் 30 பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலைக்கு சுருங்கிப்போனது. கல்வி வியாபாரத்தில் தங்களை முதலீடு செய்ய வசதி இல்லாதவர்களின் கடைசிப்புகலிடமாக அரசுப்பள்ளிகள் மாறிப்போன கட்டம் அது. ஆண்டாண்டு காலமாக இருந்த அந்த அரசுப்பள்ளியில் ஆயிரமாயிரம் பேர் படித்து பலனடைந்த வரலாறு ஒரு முற்றுப்புள்ளியை எட்டிவிடுமோ என்ற அச்சத்தைப் போக்க மிக அவசியத் தேவை மாற்றம் என்பதே.

காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை சரியாய் அளிக்க வேண்டும் எனும் வேட்கையில் யோசிக்க ஆரம்பித்தவர், தனக்கு மனதில் தோன்றியதையெல்லாம் செதுக்கி, பட்டை தீட்டி, இன்றைக்கு தமிழகத்தின் எந்த ஒரு பள்ளியும் தரமுடியாத ஒரு தரத்தை, ஆரோக்கியத்தை, சுகாதாரமான கல்வியை செய்துகாட்டத் தொடங்கியுள்ளார்.

ஊர்மக்களுடன் ஆசிரியர்கள்

மாற்றத்தை நிகழ்த்த சரியான மனிதர்களின் ஒத்துழைப்பை ஈட்டிவிட்டால் போதுமென்ற தன்னம்பிக்கையோடு தங்களை முன்னுதரணமாக நிறுத்திக்கொண்டு தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதியும், ஆசிரியர் ஃப்ராங்களினும் ஒரு பெரிய தொகையை அளித்து அந்த வேள்வியை தொடங்கியுள்ளனர். வளரும் தலைமுறைக்காக தொடங்கிய வேள்வியில் அவர்களின் பங்களிப்பு, அர்ப்பணிப்பு, நோக்கம் ஆகியவற்றை உணர்ந்த, அவர்களின் செயல்பாட்டின் மேல் அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்ட கிராமத்தினரின் கிராம கல்விக்குழு”வும் கை கோர்க்க நான்கே மாதத்தில் புதியதொரு உலகம் சமைக்கப்பட்டது.

இந்தக் கல்வியாண்டில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு சொர்க்கம் காத்திருந்தது. இருக்கும் இரண்டு வகுப்பறையில் ஒன்றை ஒரு முன்மாதிரி வகுப்பறையாக வடித்தெடுத்துள்ளனர்.

தங்களின் பங்களிப்பு, இராமாம்பாளையம் கிராமக் கல்விக்குழுவினரின் உதவி என, சுமார் இரண்டரை லட்சம் செலவில் இதை நிறைவேற்றியுள்ளனர். எப்படி இப்படியொரு செயலைச் செய்ய தங்களால் ஒத்துழைப்பு அளிக்க முடிந்தது என கிராமத் தலைவரிடம் கேட்கும் போது அவர் சொல்லும் ஒரே வார்த்தைதிரு.பிராங்களின் மீது தங்களுக்கிருந்த நம்பிக்கை மட்டுமேஎன்பதுதான்.

ஆசிரியர் திரு. ப்ராங்ளின்

திரு.ஃப்ராங்களின் வெறுமென ஒரு சாதாரண ஆசிரியராக அந்தப் பள்ளியில் செயல்படவில்லை. குழந்தைகளை ஒரு பெற்றோர் மனோபாவத்திலிருந்து வழிநடத்திக் கற்பிக்கிறார். யாரையும் எதற்கும் அடித்ததில்லை. உரிமையாய் பிள்ளைகள் அவர்மேல் ஏறி விளையாடுவதும் கூட எப்போதாவது நடப்பதுண்டாம். குழந்தைகள் குறித்து பெருமையாகச் சொல்லும் ஆசிரியர்எங்கள் பிள்ளைகளுக்கு வெறும் கல்வியை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை. சுய ஒழுக்கம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், நேர்த்தியாக வாழ்வது என எல்லாமே கற்றுக்கொடுக்கிறோம். இங்கிருந்து வெளியேறும் மாணவன் எவரொருவருடனும் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும்தெரிவிக்கிறார்.

பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, செய்தித்தாள்கள் வாசிப்பு பயிற்சி என அனைத்துவிதப் பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகிறது. முன்னிரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதில் குழந்தைகள் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தவும் அனுமதிபெற்று அதைத் திறம்படத் துவங்கியுள்ளனர்.


மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறை வசதியும், விளையாட மைதான வசதியும் சிறப்பாக உள்ளது. சீருடைகள், கழுத்தணி, காலணி, அரைக்கச்சை, அடையாள அட்டை, ஆசிரியர்,  மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

பிள்ளைகளின் சுய ஒழுக்கம் மற்றும் தெளிவு குறித்து கூறும்போது, புதுப்பிக்கப்பட்ட வகுப்பறையில் மூன்று மாதங்களாய் புழங்குவது ஐந்து முதல் பத்து வயதுவரை இருக்கும் பிள்ளைகளேயாயினும் இதுவரை ஒரேயொரு இடத்தில் கூட ஒரு பொட்டு அழுக்கு செய்திடவில்லை. நடந்துவரும் போது சுவர்களைத் தொடர்ந்து தொட்டால் அழுக்காகிவிடும், அதைத் தவிர்க்க வேண்டும் என்பது உட்பட ஒவ்வொன்றிலும் பிள்ளைகள் ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதை அவ்வப்போது காண நேர்ந்தது. பிள்ளைகளுள் படிந்திருக்கும் ஒழுக்கம், அந்த ஆசிரியர்களின், உழைப்பு, திறமை, அர்பணிப்புத்தன்மை, தியாகத்திற்கு கிடைக்கும் மாபெரும் அங்கீகாரமாகும்.

ந்த மறுமலர்ச்சி இத்தோடு நிற்காமல் எல்லாக் கிராமங்களிலும் பூக்க வேண்டும். அதற்கு நீரூற்ற இன்னும் எத்தனை காலம் அரசாங்கத்தையே எதிர்பார்ப்பது. ஏன் அந்த மாற்றத்தை நாமே விதைக்கக்கூடாது? கோவில் இல்லாதா ஊர்கள் உண்டா, அதிலும் குறிப்பாக அங்கிருக்கும் கோவில்கள் கோடிக்கணக்ககில், லட்சக்கணக்கில் செலவு செய்து புணரமைக்கப்படுவதற்காக எவ்வளவோ சிரமப்பட்டு எல்லாக் கிராமங்களும் நிதியீட்டிக்கொண்டுதானே இருக்கின்றன? அதில் ஏன் கொஞ்சம் தொகையை இந்த பள்ளிகளை நோக்கி மடைமாற்றக்கூடாது?  
குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆரம்பப்பள்ளியிலும் படித்து முன்னேறிய முன்னாள் மாணவர்களே கூட ஒன்று திரண்டு தங்களைச் செதுக்கிய பள்ளியை ஏன் ஒரு மாதிரிப்பள்ளியாக மாற்றிடமுடியாது? எல்லாமே சாத்தியம் தான், ஆனால் எங்கே மாற்றம் நிகழ வேண்டுமோ அங்கே ஒரு ஃப்ராங்ளின் உருவாக வேண்டும், அல்லது நானோ, நீங்களோ இதை எடுத்துச்சொல்லி ஒரு ஆசியருக்குள் ஒளிந்திருக்கும் ஃப்ராங்ளினை வெளிக்கொணரவேண்டும்! பள்ளியின் வலைப்பதிவு முகவரி


இதேபோல் ஒரு மாதிரிப் பள்ளியை அமைக்க அனைத்து திட்டங்களையும், தன் அனுபவத்தையும் தருவதற்கு திரு.ஃப்ராங்ளின் தயாராக இருக்கின்றார். நாம் தயாரா?

ஓங்கிய முழக்கத்தோடு எதையோ எதிலிருந்தோ மீட்கப்போவதுதான் புரட்சியா? மாற்றத்திற்காக அமைதியாய் மௌனமாய் நிகழ்த்துவதும் புரட்சிதான்!

திரு. ஃப்ராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள...
franklinmtp@gmail.com, pupsramampalayam@gmail.com              99424 72672      
 

-0-

பள்ளிக்குச் சென்றுவர துணை நின்ற எங்கள் ஈரோடு தமிழ்வலைப்பதிவர் குழும நண்பர்கள் கார்த்திக், ஆரூரன், லவ்டேல் மேடிக்கு நன்றி



http://www.erodekathir.com/2011/09/blog-post_5125.html

.

2 comments:

அந்நியன் 2 சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

உலக தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்கும் இக்கல்வி கூடம்.

வாழ்த்துக்கள்.

Jafarullah Ismail சொன்னது…

@ அந்நியன் 2 கூறியது...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோ.அய்யூப்