Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, ஜூலை 30

ரமளான் மாதத்தின் சிறப்புகள்

ரமளான் மாதத்தின் சிறப்புகள்

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்

“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரீ (1899)

முஸ்லிம் (1957)


ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.


இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!


“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.


மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.


இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.


“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.


இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.


“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)


இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.


கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)


கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்

ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)


உம்ரா செய்தால் ஹஜ் நன்மை

ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.

“ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)


சுவர்க்கத்தில் தனி வாசல்

நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.


“சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)


அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்

“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)


“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)


இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.


ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது

இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.(அல்குர்ஆன் 97:1-5)


எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!



நன்றி; http://www.tntj.net/

வெள்ளி, ஜூலை 29

குவைத்தில் தமிழில் வெள்ளிமேடை


குவைத்தில் தமிழில்வெள்ளிமேடை

குவைத்தில் தமிழ்பள்ளி முன்பே நடைபெற்று வருகிறது என்றாலும் கூட
எங்களது பகுதிகளில் (ஃபர்வானியா கெய்தான்) தமிழில் ஜும்ஆ என்பதுபலநாள் கனவாகவே இருந்துவிடுமோ என்ற கவலை நீண்ட நாட்களாகவே இருந்துவந்தது. காரணம் மலையாளம்,உருது என்று கிடைத்த பள்ளிகளில் அவரவர்கள் பயான் ஹதீஸ் என்று கலக்கிக்கொண்டு இருக்கதமிழ்முஸ்லிம்கள் மட்டும் நமக்கே உள்ள இயக்க வேறுபாடுகளால் தொழுகை முடிந்ததும் பள்ளிகளில்ஒவ்வொரு மூலைகளிலும் தங்கள்தங்கள் வாய்வரிசைகளை காட்டிவந்தனர்

இந்நிலையில்KTIC அமைப்பு கெய்தான் பகுதியில் ஒரு பள்ளியை(கிரவுன் பிளாசா ஹோட்டல் எதிரில்) குவைத்அரசிடம் அனுமதி பெற்று
இன்று 29-07-2011ஜும்ஆ தொழுகையை தமிழில் உரை நிகழ்த்தி மிக சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்……

இது அல்லாஹ் எங்களுக்கு கொடுத்த ரமலான் நன்கொடை!

இம்முயற்சிக்குநீண்ட நாட்களாக முழுமூச்சாய் செயல்பட்ட KTIC சகோதரர் கலீல் பாகவி.சகோ.முஹம்மதுமீராஷாபாஜில்பாகவி,சகோ.ஜெய்னுல்ஆபிதின் பாகவி, சகோ.நிஜாமுத்தின் பாகவி,சகோ.A.K.S.அப்துல்நாசர்,சகோ.Hமுஹம்மது நாசர், சகோ. M.ஜாஹிர் ஹுஸைன் மற்றும் பெயர் தெரியாத KTIC சகோதரர்களும்பாராட்டுக்குரியவர்கள்.

இனி வரும் ஜும்ஆஅனைத்திலும் தேன் தமிழ் எங்கள்காதுகளில் இனிதாய் சுரக்கும் என்பதால் அவர்களின் பணிமென்மேலும் அதிகரிக்க வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி இறைஞ்சுகிறேன்.

வியாழன், ஜூலை 28

100 மருத்துவக் குறிப்புகள்

100 மருத்துவக் குறிப்புகள்

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.


2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.


3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.


4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.


5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.


6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.


7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.


8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.


9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.


பெண்களுக்காக...

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.


11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.


12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.


13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.


கர்ப்பக் கால கவனிப்பு!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே!


15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.


16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.


17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.


18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.


19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.


20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.


21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.


22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.


23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.


24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.


25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.


26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.


27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.


28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.


29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.


30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.


31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.



உணவே மருந்து!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!


33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.


34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.


35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.


36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.


37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.


38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.


39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.


40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.


41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.


42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.


43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.


44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.


45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.


46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.


47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.


48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.




மருந்தே வேண்டாம்!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.


50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.


51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.


52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.


லப்... டப்..!


53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.


54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.


55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.


56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.


57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.



கிட்னியைக் கவனியுங்கள்


58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.


59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!


60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.


61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.



பல்லுக்கு உறுதி!


62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.


63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.


65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.


66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.


67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.


68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.


69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.


70. முகப்பரு இருந்தால்... உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.


71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.


72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.


73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.


74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்


75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.



ஜெனரல் வார்டு!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.


77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்... உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.


78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.


79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.


80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்... வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.


81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.


82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.


83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.


85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.



நில்... கவனி... செல்!


86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது... தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே - வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.


87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.


88. 'போஸ்ட்மார்ட்டம்' என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்... பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.


89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்... அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.



90. 'போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்... தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.


91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.


92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்... கறுப்பே சிறப்பு.


93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.


94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது... அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.


எச்சரிக்கை

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.


96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.


97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.


98. அலர்ஜி - ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.


99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.


100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.

நன்றி: விகடன்.

மகி, தமிழ் கருத்துக் களம்

http://tamil.darkbb.com/t99-topic

ஞாயிறு, ஜூலை 24

(18+) வரதட்சிணை எனும் அவமானம்

(18+) வரதட்சிணை எனும் அவமானம்.


புத்தக அறிமுகமும்,

எனது மலேசியா சிறைஅனுபவமும்.

18+ என்று போட்டவுடன் என்னோவோ ஏதோ என்று தவறாக நினைத்து விட வேண்டாம். வரதட்சனை எனும் கொடுமையால் என் நண்பன் எப்படி பாதிக்கப் பட்டான் என்பதை விளக்குவதற்காக அந்த 18+ வீடியோவை இணைத்துள்ளேன்.

சரி புத்தக அறிமுகத்திற்கு பிறகு மலேசியாஉண்மை சம்பவத்திற்கு போவோம்.

ஆசிரியர்:
கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
குடும்பத்தின் அமைதியைக் கெடுத்து சமுதாயத்தின் நல்லொழக்கத்தைச் சீர்குலைக்கின்ற மாபெரும் தீமையாகத் தலைவிரித்தாடுகின்றது வரதட்சிணை எனும் கொடுமை! முதிர்கன்னிகள்,தற்கொலை,விப்ச்சாரம்,சிசுக்கொலை
கருக்கொலை என வரதட்சிணையால் ஏற்படும் தீமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்தத் தீமைகளின் ஆணிவேர் எது? இது எங்கிருந்து முளைத்தது? எப்படிப் பரவியது? அந்த ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறிய என்ன வழி? அதைத்தான் இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார் டாக்டர் கே. வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள். அதுமட்டுமல்ல, வரதட்சிணைக்கு ஆதரவாகப் பேசுவோர் முன்வைக்கும் வாதங்களுக்கு உரிய பதில்களையும் டாக்டர் அவர்கள் ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார்.

பொற்றோர்,இளைஞர்கள்,இளம்பெண்கள்,சமயச் சொற்பொழிவாளர்கள்,
ஆன்மிகவாதிகள்,சமுதாயத் தலைவர்கள் ஆகியோரின் பொறுப்புகளையும்
எடுத்துரைத்துள்ளார்.

இந்த புத்தகத்தில் நான் கோடிட்ட ரொம்ப பிடித்த சில வரிகள் உங்கள் பார்வைக்கு.

வரதட்சிணை என்பது எந்த உழைப்பும் இல்லாமல் முதலீடு இல்லாமல் ஒரு பெண்ணின் இயலாமையையும் சமூகத் தந்திரங்களையும் பயன்படுத்திப் பெற்ற பணமாகும்.இதுவும் ஒருவகையில் வழிப்பறிக் கொள்ளையே ஆகும்.

கொள்ளைக்காரர்கள் கத்தியைக் காட்டி கொள்ளை அடிக்கின்றனர்.வரதட்சிணை வாங்குபவர்களோ பெண்ணின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்ளை அடிக்கின்றனர்.வழிப்பறிக்காரர்கள் சில வேளைகளில் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளவும் கூடும். ஆனால் வரதட்சிணை வாங்குபவர்களோ சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதோடு,சமூகத்தில் அந்தஸ்தோடும் உலா வருகின்றனர். எனவே கொள்ளையர்களை ‘புத்தியற்ற கொள்ளைக்காரர்கள்’என்றும், வரதட்சிணை வாங்குபவர்களை ‘புத்திசாலித்தனமான கொள்ளைக்காரர்கள்’
என்றும் வர்ணிக்கலாம்.

இப்போது என்னுடைய மலேசியா சிறை அனுபவம்.


2001ல் மலேசியாவில் கட்டிடட தொழிலாளியாக பர்மீட் இல்லாமல்வேலை பார்க்கும் போது பிடிபட்டு. மலேசியாவின் நெகிரி சிம்பிலான் என்ற ஊரில் சிறையில் ஒரு மாதம் இருந்தேன்

மலேசியாவில்
சக தமிழக கட்டிட தொழிலாளர்களோடு நான்
டி ஷர்ட்டை இன் பன்னி இருக்கிறேன்

போலீஸில் பிடிபடும்போது போட்டுயிருக்கிற ஒரே ஒரு துணி தான் இருக்கும்.
சிறையில் எனக்கு முன்னரே பிடிபட்ட 120 மேற்பட்ட தமிழர்கள் இருந்தார்கள்
ஒரு மாத சிறை வாழ்க்கையில் பலரின் சிறைநட்பு கிடைத்தது. அதில் காட்டுமன்னார்குடியை சேர்ந்த நண்பர் (பெயர் வேண்டாமே). அவரோடு மாப்பிள்ளை, மச்சான் என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்ப்பட்டது.


சிறையில் முக்கால் வாசி பேர் குளிக்கும் போது ஆடையில்லாமல் நிர்வாணமாகத்தான் குளிப்பார்கள். சிறையில் பாகிஸ்தான்,
இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நாங்க மொத்தம் 500 பேர். அதில் உடுத்துன ஆடையோடு குளித்த ஒருசிலரில் நானும், நண்பனும் அடக்கம். அதாவது ஜீன்ஸ் பேண்ட போட்டுகிட்டு குளிக்கிறது. முடிந்த பிறகு சட்டையை இடுப்பில் கட்டிக் கொண்டு ஜீன்ஸ் பேண்ட புழிந்துவிட்டு மறுபடிக்கும் போட்டுகிட்டு காய்வதற்காக வெயிலில் நிற்பது.

இப்படி நண்பன் குளித்து விட்டு சட்டையை இடுப்பில் கட்டுவதற்காக முயற்சிக்கும் போது எதார்த்தமாக விலகி அவனுடைய குந்துபுறம் தெரிந்தது. அதில் ஆழமாக மூன்று கரும்கோடுகள் தழும்பு மாதிரி இருந்தது. பார்த்தவுடன் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்.
'டேய் மாப்ளா என்னடா இது' என்று கேட்டே விட்டேன். அதற்கு அவன் 'சிங்கப்பூர்ல இருந்தேன் மச்சான். அங்கே பர்மீட் இல்லாமல் தங்கி இருக்கிறவங்கள மூன்று
ரோத்த அடி குடுப்பாய்ங்கே. நான் அங்கு பிடிபட்டபோது எனக்கு கிடைத்த அடியின் தழும்பு இது' என்றான்.

சிங்கப்பூரின் தண்டனை ரோத்த அடிப்பது இப்படித்தான்

'நீ சிங்கப்பூரையும் விட்டுவைக்கவில்லையா?' என்று கேலி செய்தேன். அதற்கு பிறகு அவன் சொன்ன பதிலில் கண்கள் உடைந்து அழுதேன்.

'அப்பா கூலித்தொழிலாளி. அன்றாட காச்சி. எனக்கு இரண்டு சகோதரிங்க. ஒன்னுக்கு வயது 30, இன்னொக்கு 32, இரண்டு பேரையும் கட்டிக்கொடுக்க முடியவில்லை. நான் டுரிஸ்ட விசாவில் சிங்கப்பூர் வந்தேன் பாஸ்போர்ட்டை தூக்கி போட்டு விட்டு இரண்டு வருடம் வேலை செய்து சில லட்சங்களை சேர்த்து மூத்த அக்காவை கட்டிக் கொடுத்தேன். இப்ப இரண்டாவது அக்காவின் திருமணத்திற்கு பணமெல்லாம் அனுப்பிய பிறகுதான் மலேசியா போலீஸ் புடிச்சாய்ங்கே. நல்ல வேளை, இனி ஊருல எதாவது புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக இருந்து பிழைத்துக் கொள்வேன்' என்றான். இன்றும் அவன் நட்பு தொடர்கிறது.

வரதட்சணையால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களின் வாழ்க்கையும் பாதிக்கிறது.

ஆக்கம்:சகோதரர் ஹைதர் அலி

வியாழன், ஜூலை 21

நிகழ்காலத்தில் வாழ்வோம் !

ஒன்று – கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் படித்துக் கொள்ளலாம்.

கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பதில் மூன்று நன்மைகள் உண்டு.

இரண்டு – கடந்த காலத் தவறுகளுக்குத் “தவ்பா” செய்து தூய்மை அடையலாம்.

மூன்று – கடந்த கால செய்திகளை நம் சந்ததிகளுக்காக ஆவணப் படுத்தி வைக்கலாம்.

இது தவிர – கடந்த காலத்தை அசை போடுவதில் வேறு எந்த நன்மையும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

ஆனால் நம்மில் பலர் - கடந்த காலத்தைத் தாங்கள் “கவலைப் படுவதற்காகவே” நினைவு கூர்கிறார்கள். ”ஆகா, இப்படி செய்து விட்டோமே…. அப்படிச் செய்திருந்தால் இப்படி நடந்திருக்காதே”.

இப்படிப் பட்ட நினைவுகளுக்கு ஒருவர் வாழ்வில் பஞ்சமே இல்லை என்பதால் இவர்கள் கடந்த காலத்திலேயே “வாழ்ந்து திளைப்பவர்கள்” என்று சொல்லலாம்.

வேறு சிலர். இவர்கள் எதிர் கால “மாயையில்” மூழ்கிக் கிடப்பவர்கள். ”நாளை என்ன நடக்குமோ.. ஏது ஆகுமோ…விபத்து நடந்து விடுமோ… மவுத் ஆகி விடுவோமோ….நஷ்டம் வந்து விடுமோ…. தோற்றுப் போய் விடுவோமோ…பெயில் ஆகி விடுவோமோ…. வேலை போய் விடுமோ….”

ஆனால் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இவர்களில் யாரும் நிகழ் காலத்தில் வாழ்வதே இல்லை!

ஆனால் நமது வாழ்க்கை என்பது என்ன? நமக்குத் திரும்பவும் கிடைக்க வாய்ப்பில்லாத கடந்த காலமா? நமக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிச்சயமற்ற எதிர்காலமா? அல்லது நம் கைகளில் இறைவன் வழங்கி நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிகழ் காலமா?

“காலத்தின் மீது சத்தியமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்” – என்று அல்லாஹு தஆலா குறிப்பிடுவதை சிந்தித்துப் பார்த்தால் மனிதன் தனக்கு நஷ்டம் விளைவித்துக் கொள்வது என்பது அவன் தன் நிகழ் காலத்தைப் பாழ் படுத்திக் கொள்வதால் தான்!

மனிதனை நஷ்டவாளியாக ஆக்குவது யார்?

வேறு யார்? ஷைத்தான் தான்!

அவன் என்ன செய்கிறான்?

நம்மை -நமது நிகழ் காலத்தைப் பற்றி சிந்திக்க விடுவதில்லை. ஒன்று – நம்மைக் கடந்த கால சிந்தனைகளில் தள்ளி விட்டு விடுவான். அல்லது -நம்மை நமது எதிர் காலம் குறித்த சிந்தனைகளில் மூழ்க வைத்திட முயல்வான்.
அதனால் நாம் நமது நிகழ் காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதனைப் பற்றிய உணர்வே இல்லாமல் ”கடமையே” என்று காரியம் ஆற்றிக் கொண்டிருப்போம்.அதனால் அதன் பயன்களை நாம் வெகுவாக இழந்து விடுவோம்.

இப்படித் தான் நம்மில் பெரும்பாலோரின் வாழ்க்கை “இயந்திரத் தனமாக” ஓடிக் கொண்டிருக்கிறது.
இதிலிருந்து விடு பட இறைவன் நமக்கு அருட்கொடை ஒன்றை வழங்கியிருக்கின்றான். அது என்ன தெரியுமா?

அது தான் தொழுகை!

அனு தினமும் ஐவேளை தொழுகையை அல்லாஹ் நமக்குக் கடமை ஆக்கியுள்ளான்.

“நிகழ் கால விழிப்புணர்வுக்காக” சற்று ஆழமாக சிந்திப்போம் இக்கடமை குறித்து.

இப்படி சிந்தித்துப் பாருங்கள்.

அதான் – தொழுகை அழைப்பொலி – காதில் விழுகிறது. அச்சமயத்தில் நாம் எந்தக் “காலத்தில்” மயங்கிக் கிடந்தாலும் - இந்த அழைப்பொலி நம்மை நிகழ் காலத்துக்குக் கொண்டு வந்து விடுகிறதா இல்லையா? நீங்கள் சும்மா இருந்து விட முடியாது; அழைப்புக்கு பதில் சொல்லியாக வேண்டும். இது முதற் கட்டம்.

அடுத்து நீங்கள் உங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்வதற்காக – உளூ செய்வதற்காக – தயார் ஆகிறீர்கள். நீங்கள் அதனைப் பரிபூரணமான முறையில் நிறைவேற்றிட வேண்டும் – இது நபி வழி. இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால் உங்கள் உளூ ஏற்கப் பட மாட்டாது. எனவே தொழுகையும் வீணாகி விடும். எனவே நீங்கள் உளூவின் சமயத்திலும் நிகழ் காலத்துக்கு வந்தே ஆக் வேண்டும்.

அடுத்து நீங்கள் பள்ளிவாசல் நோக்கி நடக்கிறீர்கள். ஆம். கம்பீரமாக நடந்திட வேண்டும். எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடிக்கும் நமக்கு கூலி எழுதப் படுகிறது அல்லவா? உங்கள் சிந்தனையும் நிகழ் காலத்துக்கு வந்து விடுகிறது.

பள்ளிவாசலை நெருங்குகிறீர்கள். “இகாமத்” கூட்டுத் தொழுகைக்கான அழைப்பு – காதில் விழுகிறது. நமது அவசர புத்தி நம்மை ஓடச் சொல்லித் தூண்டுகிறது. அதாவது சற்றே படபடப்பு. அதாவது Anxiety. அங்கேயே அல்லாஹ் நம்மைத் தடுத்து நம்மை நிகழ் காலத்துக்குக் கொண்டு வந்து விடுகிறான்.

இகாமத் சொல்லப் பட்டால் – நீங்கள் ஓடி வர வேண்டாம்; நடந்தே வாருங்கள்; கிடைப்பதில் சேர்ந்து கொள்ளுங்கள்; கிடைக்காததை முழுமை செய்து கொள்ளுங்கள் என்பது நபி மொழி. நாம் தொழுகைக்காக நடந்து வரும் போதே நாம் தொழுகையில் தான் இருக்கின்றோம் என்பதும் நபி மொழியே. சுப்ஹானல்லாஹ்!

ஆனால் – இகாமத் கேட்டதும் வேகமாக ஓடி வரக்கூடிய பல் பேர்களை நாம் அடிக்கடி பார்த்திட முடியும். இது கூடாது.
அடுத்து தொழுகை துவங்குகிறது; ஷைத்தான் ஓடோடி வந்து விடுவான்; நாம் நிகழ் காலத்தை விடுத்து கடந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் போய் வந்து கொண்டிருப்போம்.

ஆனால் அல்லாஹ் நம்மிடம் என்ன எதிர் பார்க்கிறான்?

நீங்கள் அல்லாஹ்வைப் பார்ப்பது போல் தொழுங்கள்; அது இயலாவிட்டால் அல்லாஹ் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்றாவது தொழுகையை நிறைவேற்றுங்கள். இதுவே தொழுகைக்கு அழகு! இதுவும் நபி மொழிக் கருத்து என்பதை நாம் அறிவோம்.

தொழுகையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நூற்றுக் கணக்கான நபி மொழிகள் நமக்கு வழி காட்டுகின்றன. ஆனால் நாம் தொழுகையை இயந்திரத் தனமாக அன்றாடம் நாம் செய்கின்ற ஒரு “பழக்கமான செயலாக” (habitual act) செய்து வருகிறோம்.

இப்போது நாம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் – இன்றிலிருந்து முயற்சி செய்யுங்கள்; உடனேயே “முழு வெற்றி” கிடைத்து விடும் என்று எதிர் பார்க்காதீர்கள்; தொடர்ந்து முயற்சி செய்து வாருங்கள்; உங்களின் முயற்சி அளவுக்கு வெற்றி கிடைக்கும்.

தொழுகையில் உங்களுக்குக் கிடைக்கும் இந்தப் பயிற்சியை நம் வாழ்வின் இதர செயல்களுக்கும் கடைபிடித்துப் பாருங்கள்.

சான்றாக – உணவு உண்ணும் சமயம் – நீங்கள் உணவு உண்ணுவது குறித்தே சிந்தித்திட வேண்டும். பிஸினஸ் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

உணவு உண்ணும் போது - இறைவன் பெயரால் துவக்குகின்றீர்கள். அதனைத் தந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றீர்கள்.அதன் ருசிக்காக உங்கள் மனைவிக்கு நன்றி செலுத்துகின்றீர்கள். அருகில் இருப்பவருடன் பகிர்ந்து உண்ணுகிறீர்கள். நிதானமாக உண்ணுகிறீர்கள். அழகாக உண்ணுகிறீர்கள்;

மனைவியுடன் பேசுகிறீர்களா? அப்போதும் கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு மனைவி பேச்சுக்கு “உம்” “உம்” போட்டுக் கொண்டிருக்க வேண்டாம். முழுமையாக மனைவி சொல்வதை காதில் வாங்குங்கள்; அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுங்கள்.

மனைவியை நெருங்கும் நேரமா? அது குறித்து மட்டும் நினையுங்கள்;

இப்படி வாழ்வின் எல்லா – பெரிய சிறிய – கட்டங்களிலும் – நிகழ் காலத்தில் வாழ்ந்து பாருங்கள். அதுவே வாழ்க்கை!
இப்பயிற்சியை அலட்சியம் செய்வதால் என்ன ஏற்படுகிறது? அதாவது – “கடந்த கால-எதிர்கால” வாழ்க்கையாளர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

கவலையோடு காணப் படுவார்கள்.

படபடப்போடு எதையும் செய்வார்கள்.

எந்த ஒன்றையும் முழுமையாக முடிக்க மாட்டார்கள்.

அவசரப் படுவார்கள். வேக வேகமாக நடப்பார்கள்.

யாரிடம் பேசும் போதும் கவனமாகக் கேட்க மாட்டார்கள்.

அவசர முடிவுகள் எடுப்பார்கள்; அந்த முடிவுகள் அவருக்கு நன்மை பயக்காது.

நண்பர்களை இழந்து விடுவார்கள்; பணியிடத்தில் திட்டு விழும்;

விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

வேண்டாம் நண்பர்களே! நிகழ் காலத்தில் வாழ முயற்சிப்போம். நிம்மதியாக வாழ்வோம்!!

நீடூர் மன்சூர் அ லி

-நீடூர் எஸ் ஏ மன்சூர் அலி

http://meemacademy.com/?p=414


புதன், ஜூலை 20

ஆண்களும் அடுப்பாங்கறையும்..



ஆண்களும் அடுப்பாங்கறையும்..

வெளிஉலகம் ஆண்களுடைது. வீடு பெண்களுக்கானது. வீட்டின் நிர்வாகம் - குறிப்பாக சமையலறை நிர்வாகப் பெண்களின் அதிகாரத்திற்குட்பட்டது. அங்கே அவர்களே முடிசூடாராணிகள்.

அந்த ராணிகளின் தயவால்தான் இங்கே அநேக ராஜாக்களின் கதை ஓடுகிறது. தாய் வழிச் சமூகத்தில் கணவன் மற்றும் குழந்தைகளை பராமரிப்பது வீட்டு நிர்வாகம் என்பதோடு சமயலறைப் பொறுப்பும் பெண்ணின் பொறுப்பாகிப் போனது.

ஆயகலை அறுபத்து நான்கிலும் சமையல் கலை மிக அத்யவசியமானது. ஒரு பெண்ணுக்கு கட்டாயம் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமைக்கத் தெரியாத பெண்ணுக்கு எதிர்காலம்; அவ்வளவு பிரகாசமாக இருக்காது என்று சொல்லும் அளவுக்கு சமையல் கலை பெண்களின் வாழ்வோடு இரண்டறக்கலந்தது. அவள் ஊனோடும் உயிரோடும் ஒன்றாகிப் போனது.

ஆனால் இன்றைய நவீன உலகில் இது பெண்களுக்கான சுமையாக மட்டும் இல்லாமல் இதில் ஆண்களும் பங்கேற்ற தலைப்படுகிறார்கள். இதில் ஆண்களின் பங்கு என்பது சமையலுக்கான பொருட்கள் (அதாவது இறைச்சி மீன் காய்கறிகள்) வாங்குவதிலிருந்து தொடங்குகிறது. இதிலும் கூட பெண்களின் வழிகாட்டலோடுதான் அவர்கள் தொடங்குகிறார்கள்.

1. வெண்டைக்காய் முனையை உடைத்துபார்த்து அது முற்றலா? ஏன சோதிக்க வேண்டும்.

2. முருங்கைகாயை முறுக்கிப்பார்த்து அது இளசா என சோதித்துப் பார்க்க வேண்டும்.

3. நாட்டுத் தக்காளியா? ஆப்பிள் தக்காளியா?

4. நாட்டுக் கோழியா? கிரிராஜாவா?

5. இறைச்சி வாங்கும் போது கால்கறி சந்துக்கறி! இப்படிப் போகும் அது பெரும்பாலான ஆண்கள் நாளடைவில் இந்த பர்ச்சேஸ் தேர்வில் தேறி பெண்டாட்டியின் நன்மதிப்பை பெற்றுக் கொள்கிறார்கள்.

என்றாலும் சமயங்களில் இதில் ஏமாந்து விடும் போது ராணிகள் சகிப்பதில்லை. ராஜாக்களை வறுத்தெடுத்து விடுவார்கள்.

"எந்த இளிச்சவாயனவது வருவான்" என உங்களுக்காக காத்திருந்தான் போலிருக்கிறது. நீங்கள் போய் அகப்பட்டீர்கள். தலையில் கட்டிவிட்டான்" "எத்தனை தடவை படிச்சி... படிச்சி... சொல்றது நாட்டுக் கோழின்று இப்படி கிரிராஜா கோழியை வாங்கி வந்திருக்கீறீர்களே... எனக்கு வேண்டாம். உங்க உம்மா வீட்ல கொண்டு போடுங்கோ..."
"உம்மாவும் இதை திங்கமாட்டாப்ப..."
"அப்போ தங்கச்சிகிட்ட கொண்டு குடுங்கோ... அவள்தான் ஓசியில் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்வாளே...!
நமது ராஜாவுக்கு பர்ஸ் காலியானதோடு பல்சும் எகிறும்.

இப்படியாகத் தொடங்கும் ஆண்களின் பங்கேற்பு நாட்கள் செல்லச் செல்ல ஒரு கட்டத்தில் சமையலில் நேரடியாக பங்கேற்கும் நிலை ஏற்படுவது எப்போது...? ஆண்கள் தொழில் வியாபாரம் செய்யவோ அல்லது அரபு நாடுகளுக்கும் செல்லும் போதோ வேறுவழியின்றி அகப்பை பிடிக்க நேர்கிறது.

அந்த காலத்தில் சென்னை பம்பாய் ஆந்திரா கல்கத்தா என பிழைப்பு தேடி போகும் நம்மவர்கள் கூடவே சமையலுக்கும் ஆட்களைத் தேடி பிடித்துக் கூட்டிச் செல்வார்கள்.

ஆனால் இப்போது சமையல்காரர்கள் எல்லாம் நான்கு இலச்சம் சம்பளம் கேட்பதால்... பலர் தன்கையே தனக்குதவி என்று ஆரம்பித்துவிட்டார்கள். பலர் புறப்படும் போதே திருமதிகளிடம் ரெசிப்பி எழுதி வாங்கிவிட்டுப் போகிறார்கள். ஸபரில் இருக்கும் போது மனைவியின் சமையலுக்கு ஏங்கினாலும் வேறு வழியில்லை. இரண்டொரு மாதங்களில் ஊர் வரும் போது நாக்கை சப்புக்கொட்டி அந்த ஏக்கத்தை தீர்த்துக் கொள்வார்கள்.

இதில் திரை கடலோடி திரவியம் தேட அரபு நாடுகளுக்கும் செல்வோரின் நிலைதான் பரிதாபமானது. சமையல் குறித்து அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதை இருக்கும் இவர்கள் தங்கும் கேம்ப்பில் பல நாட்டவர்கள் இந்தியாவின் பல மாநிலத்தவர்கள் ஒரு சேரத் தங்கியிருந்தாலும் சமையல் என வரும் போது இனம் இனத்தோடு வெள்ளாடு தண்ணியோடு என்பது போல இனவாரியாக மொழிவாரியாக சேர்ந்து கொள்வார்கள். தமிழருக்கும் மலையாளிக்கும் உணவு விஷயத்தில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை என்பதால் இவர்கள் சேர்ந்து சமைப்பதை பல இடங்களில் காணலாம்.

ஸ்ரீலங்காவின் சிங்களர் தவிர்த்த தமிழ் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தவர்களும் நம்மோடு கூட்டுச் சேர்வதுண்டு. இவர்கள் தமிழர்கள்தான் என்றாலும் இவர்களின் உணவுமுறை நம்மிலிருந்து பெரிதும் வேறுப்பட்டது. அதிகமாகக் காரம் சேர்ப்பார்கள். மாட்டிறைச்சிதான் இவர்களின் பிரதான உணவு. மாதம் 30 நாட்களும் மாட்டிறைச்சிதான் சமைக்க வேண்டும் என்பார்கள்.

சமையல் செய்ய சுழற்சி முறையில் இவர்கள் முறை வரும்போது நாங்கள் பெப்சிடப்பா வோடுதான் சாப்பிட அமர்வோம். ஒரு கவனம் சோறு ஒரு சிலர் பெப்சி என்றுதான் சாப்பிடமுடியும். இல்லையெனில் காரம் மூறை வரை எகிறிவிடும்.

இவர்களுக்கு (ஸ்ரீலங்கா) நாங்கள் ரகசியமாக 80x20 என்று பெயர் வைத்திருந்தோம். அதாவது 80மூ காரம் 20மூ ஆயில் என்பது இதன் பொருள். அவர்களது காரம் சில சமயம் அவர்களுக்கே தாங்க முடியாமல் போகும் போது சர்க்கரை பால் மாவு போன்ற பொருட்களை சற்றும் தயக்கமின்றி குழம்பில் சேர்த்துவிடுவார்கள். காரமுமின்றி இனிப்பும் இன்றி ஒரு வித புதிய சுவையில் அந்த பதார்த்தம் இருக்கும். சாப்பாடு மட்டும் முன்னேயும் போகாது பின்னேயும் போகாது.

நாம் இறைச்சிக்கு இஞ்சிபூண்டு தயிர்விட்டு தாழிப்பதை பேரதிசயமாக பார்பப்பார்கள். அதன் மணம் நாசியில் ஏறும் போது 'சூப்பர்" என்பார்கள். நான் ரியாதில் பாண்டா சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் போது அங்கே கம்பெனி சாப்பாடுதான். இந்தியர்களும் பங்களா தேஷிகளும் தான் அங்கு அதிகம் பணியில் உள்ளனர்.

எனவே 2நாள் இந்தியச் சமையல் 2 நாள் பங்களா தேஷ் சமையல் என்றிருக்கும். (இந்திய சமையல் பெரும்பாலும் மலையாளிகள் சமைப்பார்கள்) இதில் என்ன வேடிக்கை என்றால் மலையாளிகள் ரசம் வைக்க மாட்டார்கள். ஆனால் பங்களாதேஷிகள் இந்தியர்களுக்காக ரசம் வைப்பார்கள். சாப்பாடு வாங்க தட்டோடு கவுண்டருக்குப் போகும் போது "பாய்சாப் ரசம் வேற" என்பார்கள். அவர்கள் வைக்கும் ரசமும் ஒரு மாதிரி நன்றாகவே இருக்கும்.

பங்களாதேஷிகளின் சமையலில் கண்டிப்பாக அவர்கள் நாட்டு மீன் ஒன்றிருக்கும் பெரிய பெரிய துண்டாக கட்டை மாதிரி இருக்கும் கறுப்பாகவும் இருக்கும் வாயில் வைக்க விளங்காது. அதை பார்க்கும் போதே ஒரு மாதிரி குமட்டும். என்ன செய்வது? அவர்களின் "ரச" அன்புக்காக அந்த மீனiயும் வாங்கிக் விடுவோம்.

அவர்கள் பார்க்காத போது டஸ்ட்பின்னில் போட்டு விடுவோம். இன்னுமொன்றும் இதில் இருக்கிறது. இன்றைக்கு அந்த மர கட்டை மீனை இன்று வேண்டாம் என்றால் நாளை பொரித்த சிக்கன் துண்டுகள் சரியாக தட்டில் விழாது. எங்குமே சமையல்காரனோடு பகை வைத்துக் கொள்ளக்கூடாது.

இவைகளும் கூட ஆண் சமையல்தான் வீட்டில் கைப்பக்குவமாக பெண்கள் சமைத்தாலும் கல்யாணவிருந்து பெரிய பெரிய ஹோட்டாக்கள் கட்சி மாநாடுகள் நிலா சோறுகள் போன்றவைகளில் ஆண்களே சமைக்கிறார்கள். இவைகள் ஆண் சமையலையே வேண்டி நிற்கின்றன.

அரிசிக்குக் கூட Kitchen King என்றுதான் பெயர் வைக்கிறார்களே தவிர kitchen Queen என்று எந்த பெயரும் இருப்பதாகத் தெரியவில்லை. "அறுசுவை அரசு" என்று பட்டமெல்லாம் கூட ஆண்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. அறுசுவை அரசிகள் குறித்து யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

எவ்வளவு பெரிய 'அரசாக' இருந்தாலும் ஏதாவது ஒரு 'அரசி'யிடம் தான் அடிப்படை பாடம் கற்றிருக்க வேண்டும். சாலப்பரிந்தூட்டுவதும்; தாயல்லவா...!

என்ன அறுசுவை விருந்து எனினும் 2 நாட்களுக்கு மேல அவைகளை சாப்பிட முடிவதில்லை..தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு வந்து விடும். விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு என்பது உவமான சொல்.
ஆனால் மனைவியின் சமையலை தாயின் சமையலையோ நாம் அந்தக் கணக்கில் சேர்க்க முடியாது சேர்க்கவும் கூடாது

அரபு நாடுகளில் சமைத்துப் பழகுபவர்களில் சிலர் ஊரில் ஹோட்டல் வைத்து பிழைக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்று விடுகின்றனர். சிலர் வீட்டில் பெண்டாட்டிக்கு நல்ல உதவியாக இருக்கின்றனர்.

அடுப்பாங்கரை வேலையை ஆண்கள் பார்த்தால் அவனை பொன்னையன் (முன்னாள் மந்திரி அல்ல) என்று கேவலமாக விமர்சிக்கும் வழக்கம் மெல்ல மெல்ல மாறி அடுப்படியில் உதவும் ஆபத்பாந்தவனாக கணவனை மதிக்கும் மனைவிமார்கள் உருவாகி விட்ட காலம் இது. ஒரு உதவி என்று ஒரு சமயம் சமையல் வீட்டினுள் புகுந்து வேலை செய்தால். அதையே சாக்காக வைத்து 'இன்னாங்கோ அந்த வெங்காயத்தை கொஞ்சம் நறுக்கித் தாங்கோ..."

"அந்த இஞ்சி பூண்டை கொஞ்சம் மிக்சியில் போட்டு அரைத்துத் தந்தால் என்ன கொறஞ்சா போவீங்கள் ..." என்றறெல்லாம் உதார்விடும் புண்ணியவதிகளும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் உம்மா சோறாகினா குழந்தைகள் சாப்பிடுவதில்லை. வாப்பா சமைத்தால் மட்டுமே வாண்டுகள் சாப்பிடும் இது எப்படி இருக்கிறது? அப்படியானால் Kitchen King என்ற பெயர் பொருத்தம்தான் என்கிறீர்களா...?

ஏம்ப்பா... சர்வர்
இது தான் ஸ்பெஷல் தோசையா?
இதில் அப்படி என்ன ஸ்பெஷல் !"

"இது இன்னிக்கு போட்டது சார்!"

ஆக்கம்: கே.எஸ்.முஹம்மத் ஷுஐப்

சில பயனுள்ள தகவல்கள்

சில பயனுள்ள தகவல்கள்

இதில் பல பயனுள்ள தகவல்கள் உள்ளன. அதை நாங்கள் உங்களிடம் பகிர்ந்துகொள்கின்றோம்.இதனை நாம் படித்து பயனடைவது மட்டும் அல்லாமல் நம்மால் முடிந்த அளவு இச்செய்தியினை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களும் பயன்பெற ஏதுவாக இருக்குமென
நம்புகின்றோம்.


1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கைநடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.


2) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்துhttp://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.


3) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.


4) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும்.மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


5) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சல் பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.


6) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை


*மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்


*நீரினையும்,இன்னபிற சக்திகளையும் (மின்சாரம்உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்


*ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம்
செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.


7) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!


8) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்.http://ruraleye.org/


9) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது.
மேலும் விபரங்கள் பெற 9916737471


10) இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.


மேலும் விபரங்களுக்கு
வகை : புற்றுநோய்

முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

Thanks to: http://melapalayamvoice.blogspot.com/2011/06/blog-post_14.html#more

செவ்வாய், ஜூலை 19

குர்ஆன் என்னும் பெயர்

வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும் குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.

திருக் குர்ஆனிலே திருக் குர்ஆனைக் குறிக்கும் பெயர்கள் பலவற்றைத் தனியே ஒரு பக்கத்தில் தந்துள்ளோம்.

திங்கள், ஜூலை 18

ஹார்ட் அட்டாக் தெரியும்! இயர் அட்டாக் தெரியுமா?

ஹார்ட் அட்டாக் தெரியும்! இயர் அட்டாக் தெரியுமா?


கோவிலுக்கு கோபுர வாசல்கள்!

மனித முகத்துக்கு?



வாய், மூக்கு, காது, கண் இவைதாம்!’சிரித்தபடி சொல்கிறார், காது, மூக்கு, தொண்டை நிபுணர் பத்மஸ்ரீ டாக்டர் மோகன் காமேஸ்வரன்!

“உடம்பின் உள் கோளாறுகளைச் சரியாக எச்சரிக்கும் இண்டிகேட்டர்கள் இவை’ என்கிறார்.
ஹார்ட் அட்டாக் கேள்விப்பட்டிருக்கிறோம்… இயர் அட்டாக்…?

“நாம் ஓரளவு பாலன்ஸ்ட் ஆக நாடமாடுகிறோம் என்றால் காது என்ற அற்புத உறுப்பில் உள்ள திரவத்தால் தான்.’

ஸடன் சென்ஸரிநியூரல் ஹியரிங் லாஸ் சுருக்கமாக எஸ்.எஸ்.ஹெச்.எல் (Sudden Neural Hearing Loss) என்பதுதான் இவ்வகை பாதிப்புக்கான மருத்துவப் பெயர். திடீரென்று காது கேட்காமல் போய்விடும்!

“இயர் அட்டாக் ஏற்பட பல காரணங்கள் உண்டு… சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், மூச்சுப் பாதையில் இன்ஃபெக்ஷன் இவற்றுள் எது ஏற்பட்டாலும் திடீரென்று காது கேட்காமல் போய்விடும். பெரும்பாலானோருக்கு சரியான சிகிச்சை கொடுத்தால் இரண்டு வாரங்களுள் குணமாகி விடுவார்கள்…’ என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன்.

காதில் வெளிகாது, நடுக்காது, உள் காது என்று மூன்று அமைப்புகள் உள்ளன அல்லவா… அதில் உள் காது பாதிக்கப்பட்டால்தான் இத்தகைய பாதிப்பு திடீரென்று வருமாம்!

“உள்காதே இல்லாமல் பிறந்த ஒரு குழந்தைக்கு அதன் இரண்டாவது வயதில், அறுவை சிகிச்சை செய்து மூளையில் “சிப்’ (கம்ப்யூட்டர் போல) ஒன்று வைத்தோம்… மூளை நரம்புகளுடன் இணைந்து செயல்பட்டு, இன்று நான்கு வயதாகும் அக் குழந்தைக்கு நன்றாக கேட்கிறது… பேசுகிறது… இவ்வகை பிரெயின் ஸ்டெம் ட்ரான்ஸ்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை நடந்தது ஆசியாவிலேயே இதுதான் முதல் முறை…’

“உள் காதில் இருக்கும் காக்லியா (Cochlea) என்ற அமைப்பை இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் பிறவியிலேயே கேட்கும் திறன் இல்லாத பல குழந்தைகளுக்கு அத்திறனைக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று அவர்கள் வளர்ந்து ஐ.ஐ.டி.யிலும் கல்கலைக் கழகங்களிலும் படிக்கிறார்கள்’ என்று பெருமிதப்படுகிறார் டாக்டர் காமேஸ்வரன்.

நன்றி-மங்கையர் மலர்

http://senthilvayal.wordpress.com

ஞாயிறு, ஜூலை 17

சுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து


இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு என்று ஆறுவித சுவைகளை நமது நாக்கு அறியக்கூடியது என்று சொல்வதுண்டு. மேலைநாட்டவர்களின் மொழிகளில் சுவைகள் ஐந்து மட்டும்தான் உள்ளன. அவர்கள் துவர்ப்புச் சுவையை விட்டு விட்டார்கள். இது இப்படியிருக்க ஜப்பானியர்கள் "யுமாமி" என்ற ஒரு சுவையைக் குறிப்பிடுகிறார்கள். இந்தச் சுவை மாமிசம் சாப்பிடும்போது அனுபவிக்கும் சுவை என்பது அவர்கள் விளக்கம். இதையறிந்ததும் ஆங்கிலத்தில் சேவரி (Savory) என்று புது சுவை உணர்வை அவர்கள் மொழியில் சேர்த்துக் கொண்டார்கள். உண்மையில் நமது நாக்கு 25 க்கும் மேற்பட்ட சுவைகளை உணரக்கூடியது. அத்தனைக்கும் நம் தமிழில் பெயர்கள் இல்லை.


Tasteஇனிப்புச் சுவையுடைய சக்கரைப் பொருள்கள் உடலும் மூளையும் தொடர்ந்து வேலை செய்வதற்குத் தேவையான எரிசக்தியை வழங்குகின்றன. உப்புச்சுவை இரத்தத்திற்கு வேண்டிய "எலெக்ட்ரோலைட்" எனப்படும் உலோக அயனிகளை வழங்குகிறது. இரத்தத்தில் உப்பு அளவு குறைந்தால் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்துவிடும். சேவரி அல்லது யுமாமி என்று அழைக்கப்படும் மாமிசச் சுவை (தமிழில் இதற்கு இணையான சொல் இல்லை) உடலுக்கு உரம் தரும் புரதத்தை வழங்கும் பொருள்களுக்குச் சொந்தமானது. எனவே இனிப்பு, உவர்ப்பு, சேவரி (சைவ உணவுப் பழக்கமுடையவர்களுக்கு பருப்பிலிருந்து அந்தச் சுவை கிடைக்கிறது) ஆகிய மூன்றையும் நாம் விரும்பிச் செல்கிறோம்.

மனிதன் வேட்டைக்காரனாக வாழ்ந்த காலத்தில் இம்மூன்று சுவைகளையும் நாடி ஒடித் திரிந்ததில் ஒரு காரணமிருக்கிறது. அன்று அவனுக்கு கரும்பாலையோ, உப்பளங்களோ, பிராய்லர் கோழிக்கடைகளோ கிடையாது. உடம்பில் உயிர் தரித்திருக்க வேண்டுமானால் மேற்கூறிய மூன்று சுவைகளும் அவனுக்கு முக்கியம். இன்றும் அதே மூன்று சுவைகள் நம்மை ஆட்டிப் படைப்பதால் அளவின்றி அவற்றைப் புசித்து சக்கரைநோய், மனப்பதற்றம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களால் துன்புறுகிறோம்.

ஐஸ்கிரீம் வேண்டும் ஆனால் அதில் சக்கரையிருக்கக் கூடாது, ஊறுகாயில் உப்பு உறைக்க வேண்டும் ஆனால் அதில் உப்பு இருக்கக்கூடாது, மாமிசச் சுவைவேண்டும் ஆனால் சைவமாக இருக்கவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசையிருக்கிறது. இது சாத்தியமா?

நாம் நாக்குக்கு அடிமைதான். அதிலிருந்து நம்மால் விடுபட முடியாது. நாக்கின் பிடியிலிருந்து தப்பிக்க ஒரு வழியிருக்கிறது. துளி சக்கரை போட்டாலும் அது இரண்டு கரண்டி சக்கரையின் இனிப்பைத் தரவேண்டும்; சிட்டிகை உப்பிலிருந்து கால்கரண்டி உப்பின் கரிப்பு கிடைக்க வேண்டும்; மாமிசமே இல்லாமல் மாமிச சுவையை ஏதாவது தரவேண்டும். இப்படி ஒரு தந்திரம் கிடைத்து விட்டால் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், எடை கூடுவது போன்ற பிரச்சனையில்லாமல் நாம் இஷ்டம்போல சாப்பிடலாம். எப்படி சக்கரைக்கு அதிகமாக இனிப்பைத் தருவது? உப்புக்கு எப்படி அதிக உவர்ப்பைத்தருவது, மாமிசத்திற்கு எப்படி திகட்டும் அளவுக்கு அதிக சுவையூட்டுவது.. ?

மோனோசோடியம் குளுட்டமேட் என்ற உப்பினை இப்போது பிரியாணி போன்ற புலால் சமையல்களில் சேர்த்துக் கொள்கிறார்கள். அஜினோமோட்டோ என்றால் உங்களுக்கு உடனே தெரியும். அஜினோமோட்டடோ தரும் சுவையைத்தான் சேவரி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். அஜினோமோட்டோ மாமிசச் சுவையை அதிகரிக்கச் செய்கிறது. இதுபோல சக்கரையின் இனிப்பை தூக்கலாக்க ஒரு பொருள் இருந்தால் இரண்டு கரண்டி சக்கரை போடுமிடத்தில் அரைக் கரண்டி அல்லது அதற்கும் குறைவை போட்டுச் சமாளிக்கலாம்.

சேக்கரைன், அஸ்பார்ட்டேம் போன்றவை செயற்கையாக இனிப்பைத் தருபவை. அவை பொய்யானவை. அவை தரும் இனிப்பு சக்கரைபோல இருப்பதில்லை, இதனால்தான் சக்கரை நோய்க்காரர்கள் வேண்டா வெறுப்பாக செயற்கை இனிப்பைப் பயன்படுத்துகிறார்கள்.

சுவை மொட்டுகள்

பள்ளிக்கூடப் புத்தகங்களில், நாக்கின் படம்போட்டு, அதில் பல பகுதிகளை கோடிட்டுக்காட்டி இந்த இடத்தில் இனிப்பு, இங்கே கசப்பு, இங்கே காரம்.. என்று குறிப்பிட்டிருப்பார்கள். அடிநாக்கில் கசப்பு உணர்வு இருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கும். அப்படி நாக்கில் சுவைகளுக்கான மேப் எதுவும் இல்லை என்று சார்லஸ் ஸூக்கர் (1996 Charles Zuker, Professor of Biology. University of California) என்பவர் கண்டுபிடித்தார். நாக்கில் எல்லா இடத்திலும் எல்லா சுவைகளையும் அறியமுடியும்; இனிப்பு. புளிப்பு, கசப்புக் கென்று தனித்தனி இடங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்தார். நம் நாக்கின் மேல்பரப்பு சுற சுறப்பாக இருக்கிறதல்லவா, அவையாவும் மொட்டு வடிவ மேடுகள். அவற்றை சுவை அரும்புகள் அல்லது சுவை மொட்டுகள். ஒவ்வொரு சுவை மொட்டிலும் நூற்றுக்கணக்கான செல்கள் உள்ளன. அச்செல்கள் மூலம் நாம் ஆறு அல்ல 25 வகை சுவைகளை அறிகிறோம்.

Taste

ஒவ்வொரு சுவைக்கும் தனியாகச் செல்கள் உண்டு. அதாவது ஒரு செல் ஒரு சுவையை மட்டும் அறியும். அதன் வேலை உணவில் உள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து தகவலை மூளைக்கு அனுப்புவது. ஒரு மொட்டு ஒரு சுவைக்கு என்பதும். குறிப்பிட்ட நாக்குப்பகுதி ஒரு சுவையை மட்டும் அறியும் என்பதுதான் தவறான கருத்து. நாக்கில் எல்லா பகுதியிலும் உள்ள எல்லா மொட்டுகளிலும் 25 வகை சுவைகளை அறிவதற்கான செல்கள் உள்ளன.

சுவை உணரும் செல்களின் மேற்புறத்தில் உள்ள சவ்வில் சுவையை அறிவதற்கான புரதங்கள் நிறைய உள்ளன. பாயாசத்தில் முந்திரிப்பருப்பு மிதப்பதுபோல (கொஞ்சம் அதிகமாகவே) சுவை அறியும் புரதங்கள் செல்லின் வெளிச் சவ்வில் மிதந்தபடியுள்ளன. இப் புரதங்களின் முப்பரிமான வடிவம் ஒரு கிண்ணம்போன்றது. ஒரு சுவைக்கு ஒரு கிண்ணம் என்று 25 சுவைகளுக்கும் தனித்தனி கிண்ணங்கள் உள்ளன. தேனை நக்கும்போது குறிப்பிட்ட கிண்ணத்தின் பள்ளத்தில் சுவைக்குக் காரணமான மூலக்கூறு வந்து உட்காரும். சாடிக்கு ஏற்ற மூடி போல புரதமும் அதன் சுவை மூலக்கூறும் ஒன்றுடன் ஒன்று டக் கென்று பொருந்திக்கொள்கின்றன. பூட்டும் சாவியும், காலும் செருப்பும் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். இதனால் இந்தக் கிண்ணங்களை "ஏற்பி" என்கிறார்கள். அறிஞர் ஸூக்கர், நாக்கிலுள்ள சுவை ஏற்பிகளை எல்லாம் பிரித்து ஆராய்ந்து பார்த்தபோது மனிதருக்கு 25 வகைக்கும் மேற்பட்ட ஏற்பிகள் இருப்பதை அவர் அறிந்தார். அதனடிப்படையில் நம்மால் அத்தனைவகை சுவைகளையும் அறிய முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார். அவற்றை நாம் தொகுத்து ஆறு அல்லது ஐந்து சுவை வகைகளாகப் பிரித்துக்கொள்கிறோம். உண்மையில் கன்னல், தேன், திராட்சை, மாம்பழம், பலா, சப்போட்டா ஆகியவை அனைத்தும் இனித்தாலும் அவற்றில் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அல்லவா இருக்கின்றன.

இந்தக் கட்டுரையின் முக்கியமான இடத்திற்கு வந்துவிட்டோம். ஸூக்கர் சுவை ஏற்பி மூலக்கூறுகளை கூர்ந்து ஆராய்ந்தபோது ஒவ்வொன்றின் கிண்ணப்பகுதியிலும் இரண்டு அறைகள் இருப்பதைப் பார்த்தார். ஒரு அறை சுவைக்குக் காரணமான சக்கரை, உப்பு, அமிலம், கசப்பு, துவர்ப்புச் சுவைகளின் மூலக்கூறுகள் அமர்வதற்காகவும் அருகே உள்ள இன்னொரு சிறிய அறை சுவையில்லாத ஆயினும் சுவை உணர்வை பலமாகத் தூண்டிவிடும் இன்னொரு பொருளுக்காகவும் இருப்பதைக் கண்டுபிடித்தார். அஜினோமோட்டோ என்ற உப்பு தன்னளவில் சுவையற்றதாக இருந்தாலும் மாமிச உணவில் கலந்ததும் மாமிசத்தின் சுவை பன்மடங்கு கூடுவதன் இரகசியம் இதுதான்.

இதன்படி பார்த்தால், இயற்கையில் சுவைகளைக் கூட்டுவதற்கென்றே பல பொருள்கள் இருக்கும்போலத் தோன்றுகிறது. இல்லாவிடில் ஏன் சுவை உணரும் ஏற்பிகளில் இரட்டை அறை அமைப்பு இருக்கவேண்டும்?

மேலும் ஆராய்ச்சிகள் மேற் கொண்டால் சுவை ஏற்பிகளின் இரண்டாம் அறையில் அமரக்கூடிய சுவைத்தூண்டிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம். சக்கரை முதலான பொருள்களின் சுவைகளை பலமடங்காக அதிகரிக்கச் செய்யலாம். மேலும் முயன்றால் கசப்பின் வீச்சையும் தணிக்கலாம். அதன்பிறகு எல்லோர் வீட்டிலும் மாதம் 5 கிலோ சக்கரைக்கு பதிலாக கால் கிலோதான் வாங்குவார்கள். துளி உப்பு போதும் என்று திருப்தியடைவார்கள். கசப்பையும் வெறுக்காமல் உண்பார்கள். மொத்தத்தில் மனிதன் உணவினால் கெட்டுப்போகாமல் வாழ்நாள் (சிறிதனாலும்) நோயின்றி வாழ்வான்.

நன்றி: சைன்டிஃபிக் அமெரிக்கன்.

முனைவர். க. மணி

(kmani52@gmail.com)
பயிரியல்துறை.

பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி.

கோயம்புத்தூர்

Source:
http://www.keetru.com/science/earth/mani.php