Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், செப்டம்பர் 30

நீதிமன்றம் மதசார்புடன்..,

மதம் சார்ந்தவர்கள் மதம் சார்ந்த சொத்து வழக்கில் நீதி தரக்கூடாது. நாத்திகர்களே இதுபோன்ற வழக்குகளில் நீதி சொல்லவேண்டும்.
மூன்று நீதியரசர்களில், இரண்டு பேர் ஷர்மாவும், அகர்வாலும். இந்துக்கள். அதனால் அவர்கள் கொடுத்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குர்யா இடத்தில், ராமர் கூரையின் கீழ் பிறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். யாராவது நீதியரசர் என்ற பெயரில் உள்ளவர்கள் "லாம்" போட்டு ஒரு தீர்ப்பை கொடுப்பார்களா? இவர்கள் இந்துத்துவாவாதிகளாக இருப்பது இதிலேயே தெரிகிறது. அதேபோல கான் என்ற ஒரு நீதியரசர் மட்டும், 1949 ஆம் ஆண்டு 23 ஆம் நாள்தான் ராமர் சிலையை கொண்டுவந்து மசூதிக்குள் வைத்தார்கள் என்கிறார். அவர் இந்து இல்லை என்பதனால் தைரியமாக இப்படி சொல்ல முடிகிறதா? அதேபோல அந்த இரண்டு இந்து நீதியரசர்களும், கோவிலை இட்த்துதான் மசூதியை கட்டியுள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். இந்த அதி புத்திசாலிகளுக்கு எப்படி இந்த ரகசியம் தெரிந்த்தது என்று சொல்லவேண்டும். இல்லாவிட்டால் இந்திய மக்கள் இவர்களை கல்லைக்கொண்டு அடித்துக்கொல்லலாமா என்று யாராவது கேட்டுவிடக்கூடாது.
கற்பனை கதைகளை சொல்லவும், கடவுள் அங்கே பிறந்திருக்கலாம் என்று சொல்வதற்கும் இது ஒன்றும் அந்த தாத்தாக்களின் வீட்டு பேரன்களுக்கு சொல்லும் கதை இல்லையே? இது நீதி மன்றம் என்பது அவர்களுக்கு தெரியாதா? சொத்து யாருக்கு சொந்தம் என்று வழக்கு கேட்டால், ஆளுக்கு பாதி எடுத்துகிடுங்க என்பதற்கு இவர்கள் அப்பன் வீட்டு சொத்தா? இவர்கள் பிரித்துக்கொடுத்தது அயோத்தியில் உள்ள நிலத்தை அல்ல, மாறாக இந்த நாட்டு மக்களது நெஞ்சங்களை. இவர்கள் பிரித்து கொடுத்தது இந்த நாட்டு மக்களின் உணர்வுகளை. இந்த நாட்டு மக்களின் மனதுகளை. இதற்க்கு ஒரு நீதியரசர் மற்றும் நீதிமன்றம் தேவையா?
இது ஒருமதச்சர்பு அரசு என்பது பலருக்கு தெரிவதில்லை. அதனால்தான் இங்குள்ள நீதிமன்றமும் ஒருமதச்சார்பு நீதிமன்றமாக இருக்கிறது. தியோகிரடிக் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ஒருமதச்சார்பு அரசு மற்றும் நீதிமன்றம் இருப்பது இப்படியாவது அம்பலமானதே.
http://maniblogcom.blogspot.com/2010/09/blog-post_7527.html

மறுக்க பட்ட நீதி- வினவு.காம் பார்வையில்

பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம், அது இராமனுக்கு சொந்தமானது. பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது இசுலாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை” என்பது நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.
”இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதிக் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்.” இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.
”சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை. ஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். மொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.
ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE ) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
மேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்.” இது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.
தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து, அது குறித்து மயிர் பிளக்கும் ஆய்வுகள் விளக்கங்கள் இனி வழங்கப்படும். சன்னி வக்ப் போர்டு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது. இதில் வென்றவர் யார் தோற்றவர் யார் என்றெல்லாம் பார்க்கக் கூடாதுஎன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கூறியிருக்கிறார். அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற தங்களது கூற்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக பாஜக வினர் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.
“இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது. ” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.
ராஜீவ் தவான் கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பைப் பற்றி கூறத்தக்க மிக மென்மையான விமரிசனம். “இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன்” என்று குஜராத் படுகொலை நாயகன் மோடி சொன்ன செய்தியைத்தான், “சுக்குமி-ளகுதி-ப்பிலி” என்று வேறு விதமாகப் பதம் பிரித்து சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மத்திய அரசு, உச்சநீதி மன்றத்திடம் தள்ளிவிட்ட போது, “இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை” என்று கூறி அதனை நிராகரித்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது லக்னோ உயர்நீதிமன்றம். “அங்கே ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை” என்று ஒரு உரிமையியல் வழக்குக்கு தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல் இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள் சர்மாவும் அகர்வாலும். ”நம்பிக்கையை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, அதனை ஆராயக்கூடாது. தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு கிடையாது” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் இன் வாதம். தற்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் நீதிமன்றத்தைக் கொண்டாடுகிறார்கள்.
”கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதிக்கு கீழே இருப்பது கோயிலும் இல்லை. அயோத்தி முன்னர் பவுத்த மையமாக இருந்தது. அதனைப் பார்ப்பனியம் கொன்றொழித்தது. அயோத்தி மட்டுமல்ல, தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை.. ”என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன.
இத்தனைக்கும் பிறகுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. “எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி” என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பன பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத்தொடங்கியிருக்கிறது.
ஒரு உரிமை மூல வழக்கில் (TITLE SUIT) 16 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி சென்று ஆவண ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்பதை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஒப்புக்கொள்வார்களேயானால், நல்லது. இதனையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வோம். வரலாற்றில் நேர் செய்ய வேண்டிய கணக்குகள் நிறைய இருக்கின்றன. அசைக்க முடியாத ஆதாரங்களும் இருக்கின்றன.
நாகை புத்தவிகாரையின் தங்க விக்கிரகத்தை திருடி உருக்கித்தான் திருவரங்கம் கோயிலின் திருப்பணியை செய்ததாகவும், கோயிலின் மதில் சுவரை எழுப்புவதற்கு வேலை செய்த சூத்திர, பஞ்சம மக்களை கூலி கொடுக்காமல் ஏமாற்றி கொள்ளிடத்தில் மூழ்கடித்துக் கொன்றதாகவும் அந்தக் கோயிலின் வரலாற்று ஆவணமாக வைணவர்களால் அங்கீகரிக்கப்படும் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் 1000 ஆண்டு விழா கண்ட பெரியகோயிலும் கூட இலங்கையையும் கேரளத்தையும் கொள்ளையடித்த காசில் கட்டப்பட்டது. விவசாயிகளின் ரத்தத்தில் பராமரிக்கப்பட்டது. இவற்றுக்கும் அந்தக் கோயிலிலேயே கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.
அல்லது சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்வோம், சைவ மெய்யன்பர்கள் போற்றிப் புகழும் பெரிய புராணத்தில் நந்தனை எரித்ததற்கு ஆதாரம் இல்லையா, அல்லது நடராசப் பெருமானின் சந்நிதிக்கு எதிரில் நந்தனாரின் சிலை இருந்தது என்று கூறும் உ.வே.சாமிநாதய்யரின் பதிவு இல்லையா?
எல்லா ஆதாரங்களும் தயாராக இருக்கின்றன. ஆனால் மேற்படி கோயில்களையோ, கோயில் பிரகாரங்களையோ அப்படியே வைத்துக்கொண்டு நீதி கேட்டால் நமது நீதிமன்றங்கள் நீதி வழங்கமாட்டார்கள். அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கி, “சர்ச்சைக்குரிய இடம்” என்று பெயர் சூட்ட வேண்டும். சில ஆயிரம் உயிர்களைக் கொன்று போடவேண்டும். அந்தப் பிணங்களின் மீதேறி ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்.
அப்புறம், பெரியபுராணம், கோயிலொழுகு, திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டு ஆதாரம் .. போன்றவற்றை வைத்து வாதம் செய்தால் நீதிமன்றம் நம்முடைய வழக்கை ஒரு உரிமை மூல(TITLE SUIT) வழக்காக எடுத்துக் கொண்டு ‘நீதி’ வழங்கும். ஆலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய நீதி இதுதான்.
பின்குறிப்பு  – 1:
அப்படியானால் 1992 இல் உலகமே பார்த்திருக்க பாபர் மசூதியை இடித்துத் தள்ளினார்களே கரசேவகர்கள், அதுக்காக லிபரான் கமிசனெல்லாம் போட்டு முட்டைக்கு மயிர் பிடுங்கி அறிக்கை சமர்ப்பித்தார்களே அந்த வழக்குகளையெல்லாம் என்ன செய்வார்கள்? மசூதி இடிப்பை குற்றம் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருப்பது நியாயமாகுமா? 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று லக்னோ உயர்நீதிமன்றம்  வழங்கவிருக்கும் தீர்ப்பை, தம்முடைய தீர்க்கதரிசனத்தால் உணர்ந்து கொண்டு, அந்த தீர்ப்பை 1992, டிசம்பர் 6 ஆம் தேதியன்று முன்தேதியிட்டு அமல்படுத்தியிருக்கிறார்கள் கரசேவகர்கள். அன்று கடப்பாரை ஏந்திய ஒரு நாலு பேரின் கையிலாவது  சுத்தியலைக் கொடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்குவதுதான் நீதி தேவதைக்கு இந்தியா செலுத்தும் மரியாதையாக இருக்கும். இல்லையா?
பின்குறிப்பு  – 2:
பாபர் காலத்து டைட்டில் சூட்டையே விசாரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறதே, தங்களுடைய நிலத்தை ராஜா ஹரிசிங் உடன் ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்து பறித்துக் கொண்ட இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் ஒரு டைட்டில் சூட் போட்டால், அயோத்தி வழக்கைப் போலவே அதனையும் விசாரித்து நேர் சீராக ஒரு தீர்ப்பை அந்த மக்களுக்கு இந்திய நீதிமன்றம் வழங்குமா?
____________________________________________நன்றி___வினவு .காம்__________________________

தேசபக்தி இதுதானா?



சி.பி.ஐ. மற்றும் காவல்துறையால் 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகள் சம்பவங்கள் அனைத்தும் ஹிந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விளக்கமான கட்டுரை ஒன்றினை, ஜூலை.19'2010 தேதியிட்ட அவுட்லுக் ஆங்கில வார இதழ் கவர் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதி தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.

'2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி. இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம்(2010) ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை, இந்த குண்டுவெடிப்பு, இந்திய முஜாஹிதீன்,ஹர்கத்-உல்-ஜிஹாத், பாகிஸ்தான் ஆதரவு, சிமி தீவிரவாதிகளின் செயல் என்று வழக்கை விசாரித்து வந்த காவல்துறையும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்துவந்தன.

முஸ்லிம்களின் புனிதத்தளமான தர்காவில் ஜிஹாதி அமைப்பினர் குண்டு வைப்பார்களா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் இந்தியாவில் இத்தகைய கேள்விகள் கேட்பதற்குத் தகுதியற்றவை.

தேவேந்திர குப்தா கைது செய்யப்பட்டு, இந்து அடிப்படைவாத இயக்கங்கள் மீது கைக்காட்டும் வரை,சந்தேகத்தின் கண்கள் அணைத்தும் முஸ்லிம் அமைப்புகள் மீதே இருந்தன.

பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள்.ஆனால் இப்போது "ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாங்கள் கைது செய்துள்ளோம். சரியான திசையிலேயே எங்களுடைய வழக்கு விசாரனை போய்க்கொண்டிருக்கிறது" என்று இராஜஸ்தான் மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்பு படையின் (Anti Terrorist Squad - ATS) தலைவர் கபில் கார்க் என்பவர் சொல்கிறார்.

2007ஆம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே, ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாம் (Harkat-ul-Jehad-e-Islami-HuJI) என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று ஹைதராபாத் போலீஸ் அறிவித்தது. அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 26 பேரைக் கைது செய்து, கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து ஆறு மாதங்கள் காவலில் வைத்திருந்தது.

ஆனால் இந்த வருடம் (2010) மே மாதம் இந்து அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஐ கைது செய்தது.

அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட,உலோகக் குழாய்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு செல்போனும் சிம் கார்டும் கொண்டு இயக்கப்பட்ட அதேவகையான வெடிகுண்டுதான் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது. இதுதான் இந்த வழக்கின் திருப்புமுணை. அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு சம்பவங்களிலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளின் கலவை இந்திய இராணுவம் பொதுவாக பயன்படுத்தும் கலவை விகிதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

அஸ்வனி குமார் என்ற சி.பி.ஐ. இயக்குனர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் தகவல் ஒன்று முக்கியமானது. அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும், மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ கண்டுபிடிக்கும்வரை ஹைதராபாத் போலீஸின் கட்டுக்கதையே தொடர்ந்தது.

அதே காலகட்டத்தில்,கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigating Agency - NIA) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு விசாரணையும் வழக்கம் போல முதலில் முஸ்லிம்கள் மீது பழிசுமத்தியது. சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டவர்கள் இந்தியன் முஜாகிதீன் அல்லது ஜிகாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டனர்.சம்பவம் நடந்த இரவு பேக்கரியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அப்துஸ் ஸமது என்பவரும் உள்ளார் என்ற பிரச்சாரத்தை மகாராஷ்டிரத்தின் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவு தீவிரமாக ஆதரித்தது. ஆனால் அப்துஸ் ஸமது மீது இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை,அதுமட்டுமல்லாமல் மற்ற வழக்குகள் சிலவற்றிலிருந்தும் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மலேகான் குண்டுவெடிப்பு விசாரணைக்கு பிறகு இந்தியாவில் தீவிரவாத சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் முற்றிலுமாக புதிய கோணத்தில் அலசப்படுகின்றன.

2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே, மஹாராஷ்டிராவில் தீவிரவாத ஒழிப்பு படைப் பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த விசாரணையில்தான் மலேகான் குண்டுவெடிப்பினை நடத்தியது அபிநவ் பாரத் (Abhinav Bharat-AB) என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு என்பதனைக் கண்டுபிடித்தது.கர்கரேவும் அவரது அணியும் வெளிக்கொண்டுவந்தது சமீபத்திய வரலாற்றின் ஒரு பகுதியைதான்.

ஹிந்துத்துவ தீவிரவாதத்தின் இந்த புதிய வடிவத்தை கண்காணிப்பதற்கு இவர்களது விசாரணை ஒரு துவக்கமாக அமைந்திருக்க வேண்டும்.

ஹைதராபாத் மெக்கா மசூதி,அஜ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நடந்த குண்டுவெடிப்பிற்கும் ஹிந்துத்துவ திரவாத அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் கடந்த இரண்டு வருடங்களாகவே வெளிவந்தவண்ணம் உள்ளன.

2002-03வாக்கில் போபால் இரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பாக இராம்நாராயன் கல்சங்கரா, சுனில் ஜோஷி என்ற இந்துத்துவ இயக்கவாதிகள் மீது சந்தேகம் எழுந்தபோதே இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. அவர்கள் விசாரிக்கப்பட்டனர் ஆனால் ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இதைவைத்தே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அந்த வெடிகுண்டுகளுக்கு பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பு உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

2006 ஆம் ஆண்டு இறுதியில் நண்டெட், கான்பூர் ஆகிய ஊர்களில் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த சிலரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும்போது சிற்சில வெடிவிபத்துகள் நிகழ்ந்தன.அதே ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள புர்னா, பர்பானி, ஜல்னா ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளில் சிறிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.நண்டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டு வந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்காக செய்யப்பட்டு வந்துள்ளது.அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும், சில ஒட்டு தாடிகளும்,முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன.

இவைகளைக் கொண்டே ஹிந்துத்துவ தீவிரவாதம் குறித்து நாம் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் ஹிந்துத்துவ தீவிரவாதம் குறித்து இந்த வருட மே-ஜூன் வரையில் யாரும் எந்த கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் இடையில் ஒரு இரண்டு மாதங்கள் 2008ஆம் ஆண்டு கர்கரே தலைமையில் மலேகான் குண்டுவெடிப்பு விசாரணை நடந்தபோது சிலர் ஹிந்துத்துவ தீவிரவாதம் குறித்து ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்திருக்கலாம்.இப்போதும் நாம் அதனை கவனிக்காது இருக்க முடியாது.

"கடந்த 10 ஆண்டுகளாகவே ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்புகளின் வன்முறைகள் குறித்த செய்திகள் நம்மிடையே உலவியவண்ணம் உள்ளன. தொடர்ந்து நடந்துவரும் இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்த முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை. அங்கங்கே நடக்கும் சம்பவங்களை மட்டும் விசாரிப்பதுடன் அவை நின்றுவிடுகின்றன. இன்னும் பெரிய பெரிய சம்பவங்களெல்லாம் விசாரிக்கப்படமலேயே இருக்கின்றன" என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மிகிர் தேசாய்.

மெக்கா மசூதி,மலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், மேற்கொண்டு விசாரணையை எவ்வாறு தொடர்வது என்று மத்திய உள்துறை அமைச்சிடம் சி.பி.ஐ. இப்போதுதான் ஆலோசித்து வருகிறது.

2008 செப்டம்பர் 29ல் மலேகானில் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்,இன்னும் அதிகமானோர் காயமடைந்தனர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் புலனாய்வில் பெண் தீவிரவாதி சாத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் என்பவருடைய மோட்டார் பைக்கை பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரைத் தொடர்ந்து தயானந்த் பாண்டே என்ற சாமியார், பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித் என்ற இராணுவ அதிகாரி உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவ பணியில் இருக்கும்போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு.

தீவிரவாத ஒழிப்பு பிரிவு (ATS) புரோகித்தை விசாரித்தபோது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்கும் ஆர்.டி.எக்ஸ் (RDX) வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளான்.

ஹைதராபாத் போலீஸ் ஏற்கனவே ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்டதனால், புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ATS அதிகாரிகள் அறிவுறத்தப்பட்டனர்.

அஜ்மீர் சம்பவத்திலும் மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில் கொள்ளவும்.

4,528 பக்கங்களை கொண்ட மலேகான் வழக்கின் குற்றப்பத்திரிகையில் அபிநவ் பாரத் அமைப்பின் பிரமாண்டமான முழுவடிவமும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

"இந்து புனிதத்தளங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பழிக்குப் பழி வாங்கவேண்டும்.” என்றும் “தனி இந்து தேசத்தை” உருவாக்கவேண்டும் என்றும் தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட தீவிரவாதிகளான புரோகித்தும், சாத்வியும் மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர்.

அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் அது கலைக்கப்பட்டது . ஹிமானி சாவர்கர் என்பவனால் 2005-06 ஆண்டுவாக்கில் புனேவில் தற்போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு, "தனி இந்து ராஷ்ட்ரம்" அமைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மலேகான் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவார் என்று நம்பப்பட்ட ஹேமந்த் கர்கரே நினைவாக மலேகானில் ஒரு இடத்திற்கு "கர்கரே சந்திப்பு" என்று பெயரிட்டுள்ளனர். செப்டம்பர் 8, 2006 இல் மலேகானில் நடந்த முதல் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் அதிகமானோர் காயமடந்தனர். வழக்கம் போலவே முஸ்லிம் இளைஞர்கள் (சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ) கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர்.ஆனால் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன.

முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட முகமது ஜாஹித், சிமி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்றாலும், சம்பவம் நடந்த அன்று மலேகானில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தியிருக்கிறார்.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி சதியில் ஈடுபட்டவர்கள் எவரும் தாடி வைத்திருக்கவில்லை.ஆனால் போலீஸால் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பல ஆண்டுகள் வளர்ந்த தாடியுடன் இருந்தனர். அவர்களில் சபீர் மசியுல்லா என்பவர் சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதம் முன்புவரை போலீஸ் காவலில்தான் இருந்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்ட தேவேந்திர குப்தா, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோஷி மூலமாக அபிநவ் பாரத் உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்று இராஜஸ்தான் தீவிரவாத ஒழிப்பு படை நம்புகிறது.

2007 செப்டம்பரில் சிமி இயக்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் சுனில் ஜோஷி கொல்லப்பட்டபோது ஆத்திரமடைந்த சாத்வி,அதற்கு பழிவாங்குவதற்காக 2008 மலேகான் குண்டுவெடிப்பை நடத்தியதாக சொல்கிறது மகாராஷ்ட்ரா ATS.

68 பாகிஸ்தானியர்கள் கொலைசெய்யப்பட்ட சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பில் சுனில் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக பெயர் வெளியிடப்படாத சாட்சி ஒருவர் புரோகித்துடன் நடத்திய தொலைபேசி உரையாடலை ஆதாரமாகக் காட்டுகிறது ATS.

இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது.இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ளன.முக்கியமாக தேடப்பட்டுவரும் இராம்நாராயன் கல்சங்கரா, சுவாமி அசீமானந்தா உட்பட இன்னும் சிலர் சிக்கினால், மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரலாம்.

மஹாராஷ்டிரா,இராஜஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கூற்றுபடி பெண் தீவிரவாதி சாத்வியின் மூலம் தேவேந்திர குப்தாவிற்கு அறிமுகமான கல்சங்கரா என்பவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்லப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் சொல்லும் ஒரு பெயர் "கல்சங்கரா” என்பதால், அவனைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமானது.

அஜ்மீர்,மெக்கா மசூதி,மலேகான்,சம்ஜவுதா எக்ஸ்ப்ரஸ் மற்றும் பல குண்டுவெடிப்புகளும் ஒரு பெரிய சதிதிட்டத்தின் சிறு சிறு பகுதிகளே. இந்த சம்பவங்களையெல்லாம் ஒன்று சேர்த்து இதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலை சிபிஐ வெளிகொண்டுவந்தால் மட்டுமே, ஹிந்துவ தீவிரவாதத்தின் முழு உருவமும் நமக்குத் தெரியவரும்.

(Source : Article titled ‘Hindu Terror - Conspiracy of silence’ by Smruti Koppikar, published in ‘The Outlook “, a weekly news magazine, dated July 19, 2010.) , outlookindia
தமிழாக்கம்:பிரபாகரன்,கீற்று
thanks  
abu umar -forwd message from hassim

பர்தா அடிமைத்தனமா?

மங்கையின்
மறைந்திருக்கும் அவயங்களை
முறைத்துப் பார்த்துச் செல்லும்
உலகம் திறந்துக்காட்டச் சொல்லும்!

இழுத்துப்போர்த்தி நடந்துச்சென்றால்
அடிப்படைவாதி என்றேச் சொல்லும்;
அடிமைசாசனம் செய்யும்!

சமத்துவம் சொல்லும்
பள்ளியிலே மதத்துவேசம் நடக்கும்;
எதிர்த்து நின்றுக் குரல் கொடுத்தால்
இல்லையென்றே நடிக்கும்!

அவிழ்த்துப் பார்க்க
ஆசைப்படும் அவல
நிலையைப்பாருங்கள்!
என் பிள்ளைப் போர்த்திச் சென்றால்
இவனுக்கென்ன கேளுங்கள்!

அழகைக் காட்டிச் சென்றால்
உச்” கொட்டும் உலகம்;
ஒரு நாள்
இச்கொட்டத் துணியும்;
பெண்மை புகழ் காக்க
புர்க்கா உண்டு தாமதிக்காதீர்கள் இனியும்!

குறையேதுமில்லை
திரையிட்டு வந்தேன்;
உன் இச்சைக்கொண்ட
பார்வைக்கு எச்சில் துப்பி
எதிர்ப்பேன்!

அரைநிர்வாணம்
அழகாய் தோன்றும் உனக்கு;
உன் அக்காள் தங்கை
திறந்து வந்தால்
முழுக்கோபம் எதற்கு!

மாற்றான் தோட்டத்து
மல்லிகை மட்டும்
மணக்கவேண்டும் உனக்கு;
மானங்கெட்ட மானிடனே
மனைவியை  
பூட்டிவைக்கிறாய் எதற்கு!

போர்த்தியிருக்கும் எங்களை
கழட்டச் சொல்லி கேட்கிறாய்;
கழட்டி வந்த பெண்களிடம்
கைவரிசையைக் காட்டுகிறாய்!

மானம் காக்க
மறைத்திருப்பது
சிறையென்று நீ நினைத்தால்;
ஒத்துக்கொள்கிறேன்
ஒளிந்திருக்கிறேன்
உனக்காகத்தான்;
தப்பிப்பதற்கு!

யாசர் அரபாத் கவிதை தொகுப்பிலிருந்து 

திருடனாய் பார்த்து

உலக நாடுகளில் உள்ள ஊழல் பெருத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 84 வது இடமாம். நல்லவேளை 84 என்று சந்தோஷப்படுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இது மிகவும் அதிகமாக ஊழல் மிகுந்த நாடு என்பதற்கான தகுதி. மொத்தம் வரிசைப் படுத்தப்பட்ட 180 நாடுகளில் இந்தியா இந்த இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆய்வு பொதுத் துறைகளை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும். இந்த தர வரிசையினை Transperency International என்ற சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனம் மேலும் கூறியதாவது, "மக்கள் பணத்திலிருந்து கொள்ளையடிக்கப்படும் பணங்களை பதுக்கிக்கொள்ள சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் அனுமதிக்க கூடாது என்றும், வங்கி கணக்கில் ரகசியம் தேவையில்லை" என்றும் கூறியுள்ளது.

இந்த தரவரிசையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள நாடுகள் சோமாலியா, ஆப்கானிஸ்தான், மியான்மார், சூடான், ஈராக் ஆகியனவாகும். ஊழலிருந்து விடுபட்டு சுத்தமான நாடு என்று பேரெடுத்த நாடுகளில் நியூசிலாந்து, டென்மார்க் மற்றும் சிங்கப்பூர் ஆகியன அடங்கும்.

இந்த வருடம் வளர்ந்து வரும் நாடுகளில் செர்பியா, புர்கினா, பெரு, கானா ஆகிய நாடுகள் இந்தியாவை விட சிறந்த நாடுகள் என்ற நற் பெயரை பெற்றிருக்கின்றன. இந்த நாடுகளுடைய தரவரிசையாவது, அந்நாடுகளின் வரிசைப்படி 83,79,75,69 ஆகும்.
சீன இந்தியாவை விட சற்று முன்னுக்கு நிற்கிறது. அதாவது இந்தியாவை விட ஊழலில் சற்று குறைந்த நாடாக இருக்கின்றது.

இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் நேபாளத்திற்கு 139 வது இடமும், பாகிஸ்தான் வங்காளதேசத்துடன் இணைந்து 139 வது இடமும், இலங்கைக்கு 97 வது இடமும் கிடைத்துள்ளது.

இந்த 180 நாடுகளில் பாதிக்கும் மேலான நாடுகள் பத்து மதிப்பெண்ணிற்கு மூன்று மதிப்பெண்ணிற்கும் குறைவாக பெற்று மிகவும் ஊழல் மிகுந்த நாடுகள் என்ற அவப்பெயரை பெற்றுள்ளன.

இதன் மூலம் உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் கறை படிந்த கைகளையே வைத்திருக்கின்றன என்று தெரிய வந்துள்ளது. இந்த தர வரிசையினை தயார் செய்ய 13 வெவ்வேறு நிபுணர்கள் மற்றும் வணிக ஆய்வுகளை பயன்படுத்தியிருக்கிறது இந்த நிறுவனம்.

இந்த ஆய்வு மூலம், Transperency International நிறுவனம், "ஊழலுக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், இதனால் வறுமைக்கெதிரான சர்வதேச யுத்தத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்" என்று கூறுகிறது.

நன்றி,
டைம்ஸ் ஆப் இந்தியா.

உலகை ஏமாற்றிய அமெரிக்கா

வாஷிங்டன்,செப்.12:உலக வர்த்தகமையம் நிலைக்கொண்டிருந்த அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது விமானத் தாக்குதலில் அல்ல என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

வாஷிங்டனில் உலகவர்த்தக மையம் தகர்க்கப்பட்ட ஒன்பதாவது நினைவுத் தினம் அனுஷ்டிக்கும் வேளையில் ஆர்கிடெக்ட்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் ஃபார் 9/11 ட்ரூத் என்ற அமைப்பு உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்டது குண்டுவெடிப்பின் மூலம்தான் என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று நடந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ விளக்கம் தவறு என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் ரிச்சார்ட் காஜ் தெரிவித்துள்ளார்.

கட்டிடங்களின் மீது விமானங்கள் மோதவில்லை எனவும், அக்கட்டிடங்களில் நடந்த குண்டுவெடிப்பினால்தான் உலக வர்த்தக மையம் தகர்ந்தது என காஜ் கூறுகிறார்.

உலக வர்த்தக மையம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து உருகியநிலையிலான உலோகச் சிதறல்கள் கிடைத்துள்ளன. விமான எரிபொருள் இரும்பையோ அல்லது ஸ்டீலையோ உருக்குவதில்லை. ஆதலால் கட்டிடத்தின் உள்பகுதியிலிருந்து ஏதேனும் பொருள்தான் கட்டிடம் தகர்வதற்கு காரணமாகயிருக்கும்-அறிக்கை கூறுகிறது.

விமானம் மோதாமலேயே 6.5 வினாடிகளில் கட்டிடங்கள் தகர்ந்தது எப்படி? என்பதுக் குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என 600 ஆர்கிடெக்டுகள் மற்றும் என்ஜினீயர்கள் அடங்கும் அவ்வமைப்பு கோரியுள்ளது.

உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்ட இடத்திலிருந்து கிடைத்த உலோக சிதறல்களில் நானோ தெர்மிட்டிக் ஒருங்கிணைப்பின் சிதறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கட்டிடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதற்கு ஆதாரம் எனவும் அவ்வமைப்பு கூறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், செப்டம்பர் 28

என் தந்தையே!..

என் தந்தையே!..

கரு கொடுத்து உருவாக்கினாய்

விரல் பிடித்து நடை பழக்கினாய்

கண்டிப்புடன் கல்வி தந்தாய்

பணிவுடன் பாசமும் பொறுமையும் தந்தாய்

நம்பிககையுடன் கல்லூரி செல்கையில்

தைரியம் என்ற ஆயுதம் பழக செய்தாய்

தன்னம்பிகையுடன் ப்ணிக்கு செல்லும்போது

தன் கடமை முடித்தாய்

உன் இதய்ம் ஓய்வு எடுத்தபோதும்

தவித்து நின்றால் உன் முயற்சிகள்

தோற்றுவிடும் - என நீ கற்றுதத்த

பாடங்களின் உதவியுடன் உன் ஆசிர்வாதங்களுடனும்

என் ஆயுளுக்கும் ஓடி கொண்டிருப்பேன்.

உன் மரணம் கூட எனக்கு பாடம் தந்தது. - என் தந்தையே!


thanks to Ani, Friendly Thoughts

ஆற்றில் முழ்கி சிறுவன் பலி

திருபுவனம் தலையாரி தெரு சிவசுப்பிரமணியன் மகன் விஸ்வந்த்
நேற்று வீர சோழன் ஆற்றில் குளிக்கும் போது நீரில் இழுத்து செல்லப்பட்டான்
தீயணைப்பு வீரர்கள் நீண்ட தேடுதளுக்கு பிறகு ஆடுதுறை அருகே சிறுவனது உடல் கண்டுஎடுக்கபட்ட்டது நீச்சல் தெரியாத அச்சிறுவன் ஸ்டார் ஸ்கூல் மாணவன் என்பதும் காலாண்டு தேர்வு விடுமுறையில் இருந்தான் என்பதும் பரிதாபமான செய்தி 
இன்று பிரதே பரிசோதனைக்கு பின் உடலை பெற்று இறுதி சடங்கு நடைபெறும்

தலைவராக ஆசையா? இத படிங்க முதல்ல

தலைமைத்துவம் (Leadership) என்பதை சுருக்கமாக விளக்கி விட விரும்பினால் அதனை "பொறுப்பு" (Responsibility) என்ற ஒரே சொல்லில் வைத்து விளக்கி விடலாம்!  .
      ஆமாம், தலைமைத்துவத்தையும் பொறுப்பினையும் நாம் பிரிக்கவே முடியாது!  
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் தம் குடி மக்கள் குறித்து விசாரிக்கப் படுவார். குடும்பத்தலைவன் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப் படுவான். மனைவி தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளி ஆவாள். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவாள். பணியாள் - தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளி ஆவான். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவான். அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்.(நபி மொழி ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)    
     அபூ பக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, மதீனாவே மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சியில் இரு சிறுமிகள் மட்டும் பங்கு பெறவில்லை. காரணம், அபூ பக்ர் அவர்கள், தம் வீட்டின் அருகே வாழ்ந்த அந்த சிறுமிகளுக்கு, அவர்களது ஆடுகளிலிருந்து பால் கறந்து கொடுப்பது வழக்கம். அபூ பக்ர் அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, அந்த சிறுமிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது அபூ பக்ர் அவர்கள் வழக்கம் போல தங்களுக்குப் பால் கறந்து தருவார்களா -  என்பது தான் அந்த சந்தேகம். 

     இந்தத் தகவல் அபூ பக்ர் சித்தீக் அவர்களின் காதுகளில் விழுந்தது. உடனே அவர் அந்த சிறுமிகள் இருக்கும் இடம் தேடிச் சென்று சொன்னார்: இறைவன் அருளால் என் பதவி எனது வழக்கமான வேலைகளை மாற்றி விடாது என்று நம்புகிறேன். நான் நிச்சயமாக உங்களது ஆடுகளில் இருந்து பால் கறந்து கொடுக்கும் பணியை தொடருவேன்! அதன் பின்னர் அந்த வழியாக அவர் செல்லும் போதெல்லாம், "உங்கள் ஆடுகளில் பால் கறக்க வேண்டுமா?" என்று கேட்பது வழக்கம். 
     இதனைத் தான் நாம் பொறுப்பு என்கிறோம். இந்தப் பொறுப்புணர்ச்சி தான் தலைமைத்துவத்தின் அடையாளம் என்கிறோம். 
     பொறுப்பு என்பதற்கு இன்னொரு பரிமாணம் இருக்கின்றது. 
     இறை நம்பிக்கை என்பது எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். அதில் சிறப்பானது  - "லாஇலாஹ இல்லல்லாஹ்" என்ற கலிமாவாகும். அதில் தாழ்ந்தது - பாதையில் இடையூறு தருபவற்றை அகற்றுவது ஆகும். இன்னும் நாணமும் - இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும். (நபி மொழி ஆதார நூல்: புகாரி)    
 
     பாதையில் கற்களும் முற்களும் கிடக்கின்றன.  பொறுப்பில்லாதவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? பிறரைக் குறை சொல்லத் துவங்கி விடுவார்கள். பின்பு போய் விடுவார்கள் அங்கிருந்து!  

     ஆனால் பொறுப்புணர்ச்சியுள்ளவன் என்ன செய்கிறான்? அவற்றைப் பார்க்கின்றான். உடனே அப்புறப் படுத்துகின்றான். வேலை முடிந்து விடுகிறது. அவன் யாரையும் குறை சொல்லிக் கொண்டிருப்பதில்லை. உடனே களத்தில் இறங்கி விடுவான். இதற்குப் பெயர் தான் Initiative என்பது.   
     இப்போது "உங்களில் ஒவ்வொருவரும்" நபி மொழியையும் "இறை நம்பிக்கை" நபி மொழியையும் ஒரு சேர சிந்தித்துப் பாருங்கள்.
     இஸ்லாத்தில்  இறைநம்பிக்கையும் பொறுப்பும் இணைக்கப் பட்டுள்ளது! (ஏனெனில் இடையூறு தருபவற்றை அகற்றுவது ஈமானின் கிளைகளில் ஒன்று). 
     அது போல - தலைமைத்துவமும் பொறுப்பும் இணைக்கப் பட்டுள்ளது!
 
     எனவே இஸ்லாத்தில் இறைநம்பிக்கை - தலைமைத்துவம் - பொறுப்பு மூன்றுமே இணைந்து நிற்கிறது!      

     பொறுப்பு என்பதன் மூன்றாவது பரிமாணம் - ஒரு தலைவன் தான் எடுக்கின்ற முயற்சியில் தோல்வி அடைந்து விட்டால் தோல்விக்குத் தாமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.  
     வெற்றிகரமான ஒரு விளையாட்டுப் பயிற்சியாளர். அவரது வெற்றிக்குக் காரணம் என்ன என்று அவரிடம் கேட்கப் பட்டது. அவர் சொன்னாராம்: எனது விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள் - வென்றார்கள் என்பேன். ஆனால் என்னால் பயிற்சியளிக்கப் பட்டவர்கள் தோல்வி அடைந்தால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்வேன்."
     ஆனால் - இன்று தோல்விகளுக்கு, பிரச்னைகளுக்கு, இழப்புகளுக்கு - பொறுப்பேற்பவர்கள் மிகவும் குறைவு.      

     கண்ணா மூச்சி விளையாட்டில் - கதவு திறந்திருந்த ஒரு லிஃப்ட்டில் ஒளிந்து கொள்ள ஒரு சிறுமி பெட்டியில் காலடி வைக்க - அங்கே அது இல்லாததால் (?) - கீழே விழுந்து ஒரு சிறுமி இறக்கிறாள் - காரணம் - நீண்ட நாட்களாக சரி செய்யப் படாத ஒரு யந்திரக் கோளாறு. யார் பொறுப்பு? 

     21 வயது நிரம்பிய ஒர் பெண். திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் பெற்றோர்கள். வேலைக்குச் செல்லும் வழியில் ஒரு துப்புரவு லாரி இடித்து இறந்து போகிறாள்! லாரியை ஓட்ட வேண்டிய ஓட்டுனர் - வண்டியைத் தகுதி இல்லாத இன்னொருவரிடம் கொடுத்து  ஓட்டச் சொன்னதால் இந்த  விபத்தாம். - யார் பொறுப்பு?  
     பொறுப்பு என்பதன் நான்காவது பரிமாணம் - "நான் யாருக்கு பதில் சொல்லிட வேண்டும்?" என்ற கணக்குப் பிரச்னை. அதாவது Accountability. 
     இந்தியா உட்பட பல நாடுகளில் - பெண்சிசுப் படுகொலைகள் (female infanticide) கோடிக் கணக்கில் நடக்கின்றனவாம். ஒரு அறிஞர் கேட்டார்: இவர்கள் "நாம் யாருக்கும் பதில் சொல்லிடத் தேவையில்லை என்று நினைத்தனால் தானே இத்தனை கொடூரமான படுகொலைகள்? 
     இந்த நிலை ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு இல்லையே? 
     "நீங்கள் வறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்!" (அல் குர் ஆன் 17: 31) 
     எந்த ஒரு செயல் குறித்தும் - அது குறித்து - இறைவனுக்கு முன்னால் நாம் விசாரிக்கப் படுவோம் என்று அஞ்சுகின்ற ஒரு இறை நம்பிக்கையாளனே பொறுப்பான தலைவனாக விளங்கிட முடியும். 
     போரில் தன் ஒரே மகனையும் இழந்து விட்டு, மதினாவுக்கு அருகில் ஒரு குடிலில் ஒரு மூதாட்டி வசித்து வருகிறார் என்பது கலீஃபா அபூ பக்ர் சித்தீக் அவர்களின் கவனத்துக்கு வருகிறது. அவருக்கு இனி மேல், இறைவனுக்கு அடுத்தபடியாக தாமே ஆதரவாக இருக்க மனதில் உறுதி கொள்கிறார்கள். இதன் படி தினமும், அதிகாலையில் அந்த மூதாட்டி வீட்டுக்கு சென்று அதனை சுத்தம் செய்வதோடு, அவருக்கு வேண்டிய உணவுப் பொருட்களையும் வழங்கி விட்டு வருவது அவர்களின் அன்றாட அலுவல் ஆகி விட்டது. 
     இந்நிலையில் அந்த மூதாட்டி பற்றிய செய்தி, உமர் (ரலி) அவர்களுக்கும் எட்டுகிறது. ஒரு நாள் விடியற்காலையில் அங்கு சென்று அவர்கள் பார்த்த போது அந்த மூதாட்டிக்குரிய தேவைகள் முன்னரேயே நிறைவேற்ற்ப் பட்டிருப்பது தெரிய வருகிறது.
     யார் அது? - என்ற கேள்வி - உமர் (ரலி) அவர்களுக்கு. மறு நாள் சற்று முன்னரே அங்கு வந்து சேர்ந்த உமர் அவர்கள் அந்தக் குடிலின் பின்புறம் மறைந்து கவனித்த போது - அது அபூ பக்ர் அவர்கள் தாம் என்பதை அறிந்து வியக்கின்றார்கள்! 
     இருவருக்கும் - என்ன ஒரு பொறுப்புணர்ச்சி பார்த்தீர்களா? இங்கே நுணுக்கமாக ஒரு விஷயத்தைக் கவனித்திட வேண்டும். அபூ பக்ர் சித்தீக் அவர்கள் தாம் கலீஃபாவாக ஆவதற்கு முன்பேயே - ஏழைச் சிறுமிகளின் ஆடுகளுக்குப் பால் கறந்து கொடுத்தவர். இரண்டாவது கலீஃபாவாக வருவதற்கு முன்னரேயே உமர் அவர்கள் அதிகாலையில் மூதாட்டி ஒருவருக்கு உதவி செய்திட ஓடுகிறார். 
     இது எதனை உணர்த்துகிறது? 
     சிலர் சொல்வார்கள். எனக்குப் பதவி கொடுக்கப் பட்டால் - இதனைச் செய்வேன் அதனைச் செய்வேன் என்று. ஆனால் பதவிக்கு வந்ததும் எல்லாம் காற்றில் பறந்து போய்விடும். 
     பதவிக்கு வந்தால் பொறுப்பேற்பேன் என்பது வெறும் வாய்ச்சொல். பொறுப்பேற்றால் பதவி தானாக வரும் என்பது தான் இஸ்லாமிய நியதி. 
     சரி, அப்படிப் பட்ட பொறுப்புள்ள தலைவர்கள் நமக்குக் கிடைப்பார்களா?

     கண்ட கண்ட இடத்தில் குப்பைகளைப் போட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையே குறை கூறும் பொது மக்கள், மாணவர்களைக் குறித்த அக்கரையற்ற ஆசிரியர்கள், சுற்றுப் புறச் சூழல் குறித்த அக்கரையற்ற உற்பத்தியாளர்கள், உணவில் கலப்படம் செய்து விற்கும் கல் நெஞ்ச வியாபாரிகள், லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டத்தை மீறிச் செயல் பட அனுமதிகின்ற அதிகாரிகள், நோயாளிகளை ஏமாற்றுகின்ற மருத்துவர்கள், அரை குறை கட்டிடங்கள் கட்டித் தருகின்ற பொறிஞர்கள்....  

     - இப்படி சமுகத்தின் எல்லா அங்கங்களும் பொறுப்பற்ற மனிதர்களால் நிரம்பி வழிந்தால் - பொறுப்புள்ள தலைவர்கள் நமக்கு எங்கே கிடைப்பார்கள்?  
     நீதிபதி ஒருவர் சொன்னாராம். "நீதிபதிகள் நேர்மையாக நடந்திட வேண்டும் என்று பெரிதும் எதிர் பார்க்கப் படுகிறது. ஆனால் நாடே "பாலைவனமாக" காட்சியளிக்கும் போது நீதித்துறை மட்டும் எப்படி "சோலைவனமாக" விளங்கும்? 
     பாலைவனத்தைச் சோலை வனமாக்கிட முடியுமா? 
     முடியும்! ஆனால் அது நமது கைகளில் தான் உள்ளது! 
     ஏன் தெரியுமா?

     "எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ், அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை!" (அல்-குர் ஆன் 13: 11) 

     எல்லாரும் மாறினால் தான் நானும் மாறுவேன் என்பவன் பொறுப்பற்றவன். 
     ஆனால் இவரைப் பாருங்கள். 
    1997 - ல் அமெரிக்கா, ஈராக்கின் மீது பல பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வந்த போது அதற்கு வன்மையாகத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பிய ஒரு அமெரிக்கக் குடி மகன் - வெள்ளை மாளிகை முன்பு எரியும் மெழுகு வர்த்தி ஒன்றுடன் தினமும் நின்று கொண்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்தாராம். ஒரு நாள், மழையையும் பொருட்படுத்தாமல் மெழுகு வர்த்திக்கு ஒரு குடையையும் பிடித்துக் கொண்டு நின்றாராம் அவர். இதைப் பார்த்து வியந்த வெள்ளை மாளிகை சேவகர் ஒருவர் அவரிடம் கேட்டாராம்: 
     நீங்கள் ஒருவர் இப்படி நின்று கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தால் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வார்கள் என்று எண்ணுகிறீர்களா? 
     அதற்கு அவர் தெரிவித்த பதில்: 
     "நான் அவர்களை மாற்றி விடலாம் என்பதற்காக இங்கு நிற்கவில்லை. மாறாக என்னை அவர்கள் மாற்றி விட முடியாது என்பதை உணர்த்துவதற்காகத் தான் - இங்கு நான் நிற்கிறேன்!"

Source : http://counselormansoor.com
பின்குறிப்பு - இக்கட்டுரையின் ஆசிரியர் எஸ். ஏ மன்சூர் அலி  Bsc chemistry 
B Ed..MA Sociology ,P G Dip Counseling அவர்கள் நீடுரை சார்ந்தவர்
கடந்த பத்து வருடமாக இஸ்லாமிய படிப்புத்துறையில் ஆசிரியராகவும்,மாணவர்களுக்கு கவுன்சிலராகவும் வண்டலூர் கிரசன்ட் ஸ்கூலில் பணிபுரிந்துவிட்டு,மாணவர்கள்,எல்லா தரப்பு மக்கள் என்று மனித வள மேம்பாடு பற்றி ,ஆலோசனை,கருத்து பரிமாற்றம் செய்து வருகிறார்.
இஸ்லாமிய அணுகல் பற்றி இவரின் பேச்சுக்கள் ,ஆக்கங்கள் மிக கடுமையான தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றது . எனக்கு மார்க்கத்தை விளங்க வைத்த ஆசிரியர்களுள் ஒருவரான இவரின் மிகச்சிறந்த கட்டுரையை இங்கு மறு பதிவு செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வதுடன் ஆசிரிய பெருந்தகைக்கு  அல்லாஹ்  நற்பேருகளை வழங்குவானாக - வலைப்பதிவு நிர்வாகி  
  

திங்கள், செப்டம்பர் 27

உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா?

உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா?

சின்ன வயது முதல உங்கள் குழந்தையை அறிவுள்ளதாக வளர்க்க முடியும்.எவ்வளவுக்கு எவ்வளவு சின்ன வயதிலேயே தொடங்க முடியுமோ,அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.

**படிப்பை ஒரு விளையாட்டாகச் சொல்லிக் கொடுங்கள்.

**தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம் குழந்தையுடன் இருப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

**இரவுச் சாப்பாட்டின் போதுகுழந்தையின் வகுப்புப் பற்றியும்,பாடத்தைப் பற்றியும்,நண்பர்கள் பற்றியும் பேச்சுக் கொடுங்கள்.

**அகராதியில் தினசரி ஒரு வார்த்தை கற்றுக் கொள்ளப் பழக்குங்கள்.

**வெளியூருக்குப் போனால் அவ்வூர் இருக்கும் இடம், போகும் வழி பற்றி விளக்குங்கள்.

.**குழந்தையை மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள்.மிகச் சிறிய சுலபமான விஷயத்திற்குப் பாராட்டுவது தவறு.

**ஒரு புதிய விஷயத்தைக் குழந்தைக்குச் சொல்லித்தர வேண்டுமானால் ,அதற்குப் பழக்கமான வேறொன்றைக் காட்டி விளக்குங்கள்.

**எங்காவது செல்லும் போது,வழியில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளுக்கு விளக்கம் கொடுங்கள்.

**சாலை விதிகளைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள்.

**குழந்தையிடம் அடிக்கடி சொல் விளையாட்டு விளையாடுங்கள்.

**ஓரிடத்துக்குப்போய் வந்த பின் அதைப்பற்றி வர்ணித்துப் பேசக் குழந்தையைக் கேளுங்கள்.

**குழந்தைகளை அடக்காமல் ,நிறையக் கேள்விகேட்க இடம் கொடுக்க வேண்டியது அவசியம்.புரிகிற மாதிரி முழுமையாகப் பதில் கொடுங்கள்.

**படிப்பது ஒரு சந்தோசமான விஷயம் என்பதை உங்கள் குழந்தை அறியும் வண்ணம் படியுங்கள்.

By : ஜெயராஜன் -- தென்றல்

கோபப்படுகிறீர்களா?

கோபப்படுகிறீர்களா?

நாம் ஏன் கோபப்படுகிறோம்?
ஒவ்வொருவரிடமும் ஒரு பிடிவாத குணம் இருக்கிறது.
'நாம் நினைப்பதுதான் சரி:நாம் சொல்வதுதான் சரி;நாம் செய்வதுதான் சரி.
'இந்த மாதிரிஇதற்கு எதிராக ஏதாவது நடந்தால் மனம் கொந்தளிக்கிறது.இந்தக் கொந்தளிப்புதான் கோபமாக வெளிப்படுகிறது.
ஒருவன் அளவுக்கு மீறின கோபத்தில் இருந்தால் அவனால் சுயமாக சிந்திக்க முடியாது.தன கோபத்தினால் ஏற்படும் விளைவுகளைக்கூட அவனால் எண்ணிப் பார்க்க முடியாது.காரணம்,உணர்ச்சிகள் அவனை அடிமையாக்குகின்றன.

இந்தக் கோபத்தினால் எத்தனை இழப்புகள்?
நல்ல நண்பர்கள்,உறவினர்கள்,பொருட்கள் எல்லாவற்றையும் இழக்கிறோம் .கோபம் வடிந்தவுடன் நினைத்துப் பார்த்துஇப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று வருந்துகிறான்.

அடுத்தவர் சொல்வதிலும் செய்வதிலும் நினைப்பதிலும் நியாயம் இருக்கக்கூடும் என்று நினைக்கக் கூடிய மனோபாவம் வந்து விட்டாலே கோபத்தைக் கிட்டத்தட்ட முழுமையாக அடக்கி விட்டதாக அர்த்தம்.

| By : ஜெயராஜன் |

ஞாயிறு, செப்டம்பர் 26

இன்று இருதய தினம்


ஆண்டு தோறும் செப்டம்பர்26 அன்று இருதய தினம் கொண்டாடபடுகிறது
இத்தினத்தை முன்னிட்டு இருதயம் சம்பந்தப்பட்ட பதிவு
ஒவ்வொரு 20 நொடிகளிலும் ஒரு இருதய அட்டாக் ஏற்படுகிறது. இருதய அட்டாக் மூலம் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒரு மரணம் ஏற்படுகிறது.


மிகவும் குறைந்த வயதிலும் இருதய நோய்க்கான அறிகுறிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயங்கரமான சூழலில் நாம் வசித்து வருகிறோம்.


நவீன தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்திய பாதிப்பால் மாறிவரும் வாழ்க்கைமுறை, கொழுப்பு சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது, முறையான உடற்பயிற்சி இல்லாமை, மது அருந்துதல்,
புகைபிடித்தல், நீரழிவு நோய் உள்ளிட்டவை மனித உடலில் ஒட்டு மொத்த செயல்பாட்டையும் கட்டுப்பாடின்றி கொண்டு செல்கின்றன.


வாழ்வை அழிக்கும் இத்தகைய அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து அத்தகையதொரு சூழலை மாற்றி முறையான சிகிட்சைகளை மேற்கொண்டு வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றுவோம்.


இதயத்தை காக்கும் சில அடிப்படை விஷயங்கள்


1.உணவு பழக்கமுறை - குறைந்த எண்ணெய், குறைந்த கார்போ ஹைட்ரேட், அதிகமான புரோட்டீன்


2.உடற்பயிற்சி - இரண்டரை மணிநேரம் நடை பயிற்சி வாரத்திற்கு 5 நாட்கள்.


3.புகை பிடிப்பதை அறவே நிறுத்திவிடுங்கள்


4.உடல் எடையை கட்டுக்குள் வைத்திடுங்கள்


5.இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திடுங்கள்


6.மது அருந்துவதை முற்றிலும் ஒழித்துவிடுங்கள்


7.கோபத்தைக் கட்டுப்படுத்தி டென்சன் இல்லாத வாழ்க்கையை பழக்கிக் கொள்ளுங்கள்.


இதய நோயாளிகளால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) 2007-ஆம் ஆண்டிற்கான ஆய்வு தெரிவிக்கிறது.


இதய நோயாளிகளின் எண்ணிக்கைய கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியாவுக்கு 9 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என அந்த ஆய்வு எச்சரிக்கை விடுக்கிறது.


இருதய நோய் அற்ற உலகத்தை உருவாக்கிட கடுமையாக முயல்வோம்!
source- paalaivanthoothu

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

3. உடல் எடை குறைவு - சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.

5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.

7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.

13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).

16.கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.

17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !

18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.

23. சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.

24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்

25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என ( Optimist ) நம்புங்கள்.

27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்

29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.

- சலீம் முஹம்மது அவர்களுக்கு எமது இதயங்கனிந்த நன்றிகள்.