Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, அக்டோபர் 5

இன்னலை நோக்கி ஒரு அமைதி பயணம்


அனுப்புதல்

இடிந்தகரை பெண்கள்
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை
திருநெல்வேலி மாவட்டம்

அன்புள்ள சகோதரி,

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இது நாங்கள் எழுதும் நான்காவது கடிதம். இந்த முறை உங்களுக்குச் சொல்ல எங்களிடம் அதிக செய்திகள் இல்லை.

நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். ஆம்! செப்டம்பர் 10ம் தேதி நிகழ்வுகளுக்குப் பின்னால் ஒரு மாதம் ஓடிவிட்டது. ஆனால் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பப்பட்டுவிட்டதா இல்லையா என்பது குறித்து இந்திய அணுசக்திக் கழகம் தெரிவிக்கும் முரண்பட்ட தகவல்கள், உச்ச நீதிமன்றத்தின் விமர்சனங்கள் இவற்றுக்கு நடுவே எங்களுடைய வாழ்க்கை அந்தரத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது.

அக்டோபர் 8ம் தேதி, நாங்கள் அனைவரும் கடற்கரைக்குச் சென்று வெயிலிலும் கடல் அலைகளுக்கு மத்தியிலும் போராடப்போகிறோம். எங்களுக்கு அழிவுக்கு இட்டுச்செல்லும் கூடங்குளம் அணுமின் நிலையத்தையொட்டிய கடல் பகுதியில் படகுகளில் சென்று ஆண்கள் முற்றுகையிட்டுப் போராடவிருக்கின்றனர். இவற்றுக்கான ஏற்பாடுகளுக்கு மத்தியில், செப்டம்பர் 13 அன்று இறந்த சகாயத்தின் 4 குழந்தைகளும், சேவியரம்மாவின் வயதான தாயும், அவரது குழந்தைகளும், செல்வியின் மகனும் கண்ணீருடன் அவர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.

அக்டோபர் 8 அன்றும்கூட எங்களுடைய அமைதியான போராட்டத்தைக் குலைக்க அடக்குமுறை ஏவப்படும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். ஆனால், நாங்கள் ஏன் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். எங்களுடைய கேள்விகளுக்கும் அச்சங்களுக்கும் இன்னமும் விடை கிடைக்கவில்லை. ஜனநாயக முறையில் எங்களுடன் யாரும் கலந்தாலோசிக்கவில்லை. உங்கள் பகுதியில் நச்சு பரப்பும் அமைப்பொன்றை நிறுவ நீங்கள் அனுமதிப்பீர்களா? கதிர்வீச்சுக்கு உங்கள் குழந்தைகளை இரையாக விடுவீர்களா? எங்கள் வாழ்வாதாரத்துக்காக நாங்கள் நம்பியிருக்கும் கடல் நீர் மாசுபடுவது பாதுகாப்பானதுதானா? எங்கள் கேள்விகள் இந்த நொடி வரை விடையளிக்கப்படாமலும், செவிமடுக்கப்படாமலும் இருபதை என்ணி நாங்கள் கோபமுற்று இருக்கிறோம்.

ஆனால் நாங்கள் காத்திருக்கிறோம். இப்போதும்கூட, இந்த நிலைமையிலும்கூட ஒரு பேச்சுவார்த்தையோ, கலந்தாலோசனையோ நிகழக்கூடும் என்று நாங்கள் பொறுமையுடன் காத்திருக்கிறோம். நீங்கள் இருக்குமிடம், பதவி எதுவாயினும், உங்கள் அதிகாரம் சக்தி அனைத்தையும் அளித்து நீங்கள் எங்களுக்கு உதவவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தயவுசெய்து 8ம் தேதி உங்கள் கண்கள் எங்களை நோக்கி இருக்கட்டும். தமிழக முதல்வருக்கும், தொடர்புடைய மற்றவர்களுக்கும் தயவு செய்து எழுதுங்கள். காவல்துறையைக் கொண்டு எங்களை பயமுறுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுங்கள். நாங்கள் அஞ்சுபவர்கள் இல்லை. ஆனால், இந்த வேண்டுகோள் எந்தளவுக்குத் தேவை என்பதை நீங்களும் அவர்களும் உணரவேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். அவர்களுடைய தைரியத்தை அவ்வாறு காண்பிப்பதற்கு பதில் எங்களை நோக்கி வரச்சொல்லி அவர்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். சட்டத்தை மீறுவதோ, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிப்பதோ எங்கள் நோக்கம் அல்ல. எங்களுக்குத் தீராத இன்னலைத் தரும் ஒன்றை நோக்கிய அமைதியான பயணமாகவே எங்கள் போராட்டம் இருக்கும். உயர் அதிகாரிகளுக்கு இந்தத் தகவலைத் தெரிவியுங்கள்.

தயவுசெய்து அவர்களுக்குச் சொல்லுங்கள். இன்னும் 72 மணி நேரம் இருக்கிறது. இப்போது கூட எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க அவர்களுக்கு நேரம் இருக்கிறது.

தயவுசெய்து சிறையில் இருக்கும் எங்கள் சகோதரிகளை விடுதலை செய்யக் கோருங்கள். ஆண்கள் அனைவரும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்படிக் கூறுங்கள். இதையெல்லாம் கோருவது சட்டத்துக்குப் புறம்பானதா என்ன?

அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு எங்களின் குரலாய் இருங்கள்!

நன்றி

இடிந்தகரையிலிருந்து..
சகோதரிகள்
அக்டோபர் 5, 2012
( எஸ்.அனிதாவிடம் 4.10.2012 அன்று கூறியபடி)

1 comments:

Tamil Breaking News சொன்னது…

உங்களது போராட்டம், தியாகம் வீண் போகாது என்பது உறுதி.