Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

புதன், ஜனவரி 26

விபரீதம் புரியாமல் செய்த தீரச் செயல்!


எச்சரிக்கை : காஸ்ட்லி கட்டுரை!

விபரீதம் புரியாமல் எதையாவது செய்து விட்டு பிறகு ஐயோ, அம்மா என்று புலம்புவது நம் அனைவருக்கும் அவ்வபோது நேரும். அப்படி இந்த வாரம் நான் செய்த ஒரு மிகப்பெரிய தீரச்செயல் - வியாழக்கிழமை சந்தைக்கு சென்றது.

பத்திரிக்கைகளில் வெங்காயம் பற்றிய ஜோக்கை படிக்கும் போது நான் கொஞ்சம் சீரியசாகப் படித்திருக்க வேண்டும். ஏதோ கருணாநிதி குடும்ப அங்கத்தினன் போல் கவலையில்லாமல் படித்து விட்டு சந்தைக்கு சென்றது என் தவறுதான்.

சந்தையை நெருங்கும்போதே எதிரில் வரும் சிலர் எச்சரித்தனர். அலட்சியப்படுத்தி விட்டு சந்தையில் நுழைந்து முதலில் நான் விலை கேட்ட தக்காளி கிலோ நாற்பது ரூபாய். தக்காளிக்கு தங்கத்தில் கோட்டிங் கொடுத்துள்ளார்களா என்று பார்த்தேன். இல்லை நார்மல் தக்காளிதான்.

சரி முள்ளங்கி எவ்ளோண்ணே? முப்பது. உருளை நாற்பது. தைரியத்தை வலிய வரவழைத்துக்கொண்டு வெங்காயம் விலை கேட்டேன். கிலோ ஐம்பது ருபாய். ஹ்ம்ம்... கிலோ பத்து ரூபாய் வாங்கிய வெங்காயம் என்னைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது.

என்னண்ணே... ஷோ கேஸ்ல வெக்க வேண்டிய வெங்காயத்தைப் போய் இப்படி தரையில கொட்டி வெச்சிருக்கீங்க என்று கேட்டேன். "எத்தன பேரப் பாத்துட்டோம்... வாங்கறதுன்னா வாங்கு; இல்ல இடத்த காலி பண்ணு ராசா" என்பது போல் பார்வையை வீசினார் அவர்.

கால் கிலோ அஞ்சு ரூபாய்க்குக் கிடைத்த பச்ச மிளகாவை ஏனோ எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது.

சந்தைக்கு ரொம்பப் பேர் சுருக்குப் பையை விட சற்று பெரிய பையை மட்டுமே கொண்டு வந்திருந்தனர். (இன்னும் கொஞ்ச நாளில் சுருக்கு கயிறுதான் சரியாக இருக்கும் போல.) ஹை ... நான் ரெண்டு பிளாஸ்டிக் பை. (போகும்போது அதுல ஒன்னு காலிங்க்றது வேற விஷயம்)

பல பேர் முகத்தில் இன்னும் அதிர்ச்சி இருந்தது. நிறைய பேர் கருணாநிதியின் மண்டையோட்டின் முன்பகுதி பற்றி ஆர்வத்துடன் பேசிக் கொண்டார்கள்.

ஒரு கிலோ கத்தரி இருபது ரூபாயாம். கேரட்ன்னு சொல்லாதிங்க. காசு கேட்டுறப் போறாங்க என்று சகட்டுமேனிக்கு நம் மக்கள் ஜோக் என்ற பேரில் ஏதோ அடித்து கொண்டு இருந்தார்கள்.

ஹ்ம்ம். இடுக்கனிலும் நகைப்பு...

பாவம். இத்தனை தூரத்தில் இருந்து வந்து இப்படி வெயிலில் கஷ்டப்படுகிறார்களே என்று நான் முன்னர் பரிதாபப்பட்ட காய்கறி வியாபாரிகள் தற்போது ஜோஸ் அலுக்காஸ் கேஷ் கவுண்டர் தொந்திவாலா போல் தெரிந்தனர். குறிப்பாக, வெங்காய வியாபாரியின் தலைக்குப் பின்னே ஒரு ஒளி வட்டம் இருக்கிறதா என்று பார்த்தேன். லேசாகத் தெரிந்தது.

பிறகு எல்லாவற்றிலும் கிராம் கணக்கில் வாங்கிக் கொண்டு ஏக்கத்துடன் சந்தையை விட்டுக் கிளம்பினேன். எண்ணி வைக்கக் கூடிய அளவில் இருந்த காய்கறிகளை வீட்டில் பிரித்துக் கொட்டி அல்ல, காட்டி விட்டு செலவை கணக்கு பார்த்தால் தலை சுற்றியது. இருநூற்றி ஐம்பது ரூபாய்கள்..
வீட்டு கண்ணாடி முன் வந்து நின்று பார்த்தேன். என்னைப் பார்க்க எனக்கே பாவமாக இருந்தது.

"டேய்...நீ இந்தியண்டா ம்ம்ம்ம்" என்று பாஸ் படத்தில் ஆர்யா இரு கட்டை விரலையும் உயர்த்தி செய்வது போல் (நன்பேண்டா...) செய்து கொண்டு வெளியே வந்தேன்.

வாழ்க ஐ.எம்.எப்.! வாழ்க அமெரிக்கப் பொருளாதார அடிமை மன்மோகன் சிங்!

வளர்க குடும்பஸ்தன் இலவச புகழ் கருணாநிதி!

ஆக்கம்:- ஹமீது மரைக்காயர்