Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், அக்டோபர் 18

யா அல்லாஹ் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

1. யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக!
யாஅல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தருவாயாக!
யாஅல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலதுபுறமிருந்தும் இடதுபுறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

2. யாஅல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வாகிய உன்னைத் தவிர (வேறு) யாருமே இல்லை. இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர (வேறு) யாருமில்லை.

யாஅல்லாஹ்! நீயே என் இரட்சகன்! உன்னைத்தவிர வணங்குவதற்குரியவன் வேறு யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய், நான் உன்னுடைய அடிமை, நான் என்னால் முடிந்த அளவிற்கு உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின்படி நிலைத்திருக்கிறேன். நான் செய்த சகல தீமையைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நீ எனக்களித்த அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கமே நான் மீளுகிறேன். இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாற) ஒப்புக் கொள்கிறேன். எனவே என்னை நீ மன்னித்தருள்வாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. யாஅல்லாஹ்! கவலையிலிருந்து (துயரத்திலிருந்து) நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் இயலாமை மற்றும் சோம்பேறித்தனத்திலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் கடன் அதிகரிப்பதிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.

யாஅல்லாஹ்! இந்த நாளின் ஆரம்பத்தைச் சீர்திருத்தம் உள்ளதாகவும் அதன் நடுவை வெற்றியுள்ளதாகவும் அதன் கடைசியை லாபம் உள்ளதாகவும் ஆக்கியருள்வாயாக! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! ஈருலக நலவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
விதியை பொருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சொர்க்க) வாழ்வையும், வழிகேட்டின் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் இன்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நான் யாருக்கும் அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது யாராவது எனக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது நான் அத்துமீறுவதிலிருந்தும் அல்லது யாராவது என்மீது அத்துமீறுவதிலிருந்தும் அல்லது நீ மன்னிக்காத தவறு மற்றும் பாவங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

3. தள்ளாத வயது வரை உயிர் வாழ்வதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நல்ல அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் எனக்கு நீ நேர்வழி காட்டுவாயாக! அவைகளின் பக்கம் உன்னைத் தவிர வேறு யாரும் நேர்வழி காட்டமுடியாது! கெட்ட செயல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னைத் திருப்பிவிடுவாயாக! அவைகளிலிருந்து உன்னைத்தவிர யாரும் என்னைத்திருப்ப முடியாது!

4. யாஅல்லாஹ்! என் மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! என் வீட்டை எனக்கு நீ விசாலப்படுத்துவாயாக! என் உணவில் நீ அருள்புரிவாயாக! கல் நெஞ்சம், பொடுபோக்கு, இழிவு மற்றும் ஏழ்மையிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். இன்னும் இறைநிராகரிப்பு, பாவச்செயல், பிரிவை ஏற்படுத்துதல் மற்றும் பிறர் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்ற முகஸ்துதியிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். செவிடு, குருடு, உறுப்புக்கள் அழுகிவிடும் நோய் இன்னும் கெட்ட (எல்லா) நோய்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

யாஅல்லாஹ்! என் உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்துவாயாக! அதனைத் தூய்மைப் படுத்துவாயாக! நீயே அதைத் தூய்மைப் படுத்துபவர்களில் மிகச் சிறந்தவன்! அதனுடைய பொறுப்பாளனும் தலைவனும் நீயே! பயனில்லாத அறிவு, பயப்படாத உள்ளம், திருப்தியடையாத மனம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

5. யாஅல்லாஹ்! நான் செய்த மற்றும் செய்யாத கெட்ட செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். யாஅல்லாஹ்! உன் அருட்கொடைகள் (என்னைவிட்டு) நீங்குவதை விட்டும், நீ (எனக்கு) அளித்த ஆரோக்கியம் (என்னை விட்டு) மாறுவதை விட்டும், உனது திடீர் தண்டனையை விட்டும், உன்னுடைய சகல கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

6. யாஅல்லாஹ்! இடிந்து விழுந்தோ, உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். மரண நேரத்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (விஷஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். உள்ளத்தில் முத்திரையிடப்படும் அளவிற்கு பேராசை ஏற்படுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

7. யா அல்லாஹ்! கெட்ட நோய்கள், கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் விரோதிகளின் கேலி கிண்டல்களிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

8. யாஅல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் எனது அரண். எனது உலகை எனக்கு சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் வாழுமிடம். எனது மறுமையை சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக! அனைத்து தீமைகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்குவாயாக! யாஅல்லாஹ்! எனக்கு நீ உதவியாக இருப்பாயாக! எனக்கு எதிராக இருக்காதே! எனக்கு நீ உதவி செய்வாயாக! எனக்கு எதிராக உதவி செய்யாதே! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! நேர்வழி பெறும் வழியை எனக்கு இலகுபடுத்துவாயாக!.

9. யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!.

10. யாஅல்லாஹ்! (சகல) காரியங்களிலும் நிலைத்திருப்பதையும், நேர்வழியில் உறுதியையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். இன்னும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திடவும் உன்னை அழகிய முறையில் வணங்கிடவும் நான் உன்னிடம் கேட்கின்றேன். தூய்மையான உள்ளத்தையும் உண்மை உரைக்கும் நாவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த நலவுகளைக் கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த (எல்லாப்) பாவங்களிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நீயே மறைவானவற்றையெல்லாம் மிகவும் நன்கறிந்தவன்!

11. யாஅல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! என் ஆத்மாவின் கெடுதிகளிலிருந்து என்னைக் காத்தருள்வாயாக! நற்காரியங்களைச் செய்யவும் வெறுக்கத்தக்க காரியங்களை விட்டு ஏழைகளை நேசிக்கும் தன்மையையும் தந்து என் பாவங்களை மன்னித்து எனக்கு அருள்புரியும்படி நான் உன்னிடம் கேட்கின்றேன். உன் அடியார்களை குழப்பத்தில் ஆழ்த்த நீ விரும்பினால், குழப்பத்தில் ஆழ்த்தப்படாத நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்து விடுவாயாக!

12. யாஅல்லாஹ்! உன்னுடைய நேசத்தையும் உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் உன் நேசத்தின் பக்கம் என்னைச் சமீபமாக்கி வைக்கக்கூடிய எல்லா அமல்களின் நேசத்தைபும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! சிறந்த கேள்வியையும் சிறந்த பிரார்த்தனையையும் சிறந்த வெற்றியையும் சிறந்த நன்மையையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். என்னை நீ உறுதிப்படுத்துவாயாக! என்னுடைய தராசை (நன்மையால்) கனமாக்கி வைப்பாயாக! என்னுடைய ஈமானை (நம்பிக்கையை) உறுதிப்படுத்துவாயாக! என் அந்தஸ்த்தை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையையும் இன்னும் (ஏனைய) வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வாயாக! என் பாவங்களை மன்னித்தருள்வாயாக! சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நான் உன்னிடம் கேட்கின்றேன்.

13. நன்மைகளின் ஆரம்பங்களையும் முடிவுகளையும் இன்னும் எல்லா நன்மைகளையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நன்மைகளின் ஆரம்ப, முடிவு, அதன் வெளிப்படை, அந்தரங்கம் மற்றும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நான் உன்னிடம் கேட்கின்றேன்.
யாஅல்லாஹ்! என்னுடைய அந்தஸ்தை உயர்த்துவதையும் என் பாவத்தை மன்னிப்பதையும் நீ என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதையும் என் மர்மஸ்தானத்தை (கற்பை) பத்தினித்தனமாக்குவதையும் நீ என்னுடைய பாவங்களை மன்னிப்பதையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

14. யாஅல்லாஹ்! என் பார்வையிலும் கேள்விப்புலனிலும் உடலமைப்பிலும் குணத்திலும் குடும்பத்திலும் உயிர்வாழ்விலும் என்னுடைய அமல்களிலும் நீ அருள்புரியும்படி நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். என்னுடைய நற்காரியங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக! சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.

15. யாஅல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீய முடிவுகளை விட்டும் விரோதிகளின் கேலி கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ்வே! உன் மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக! உள்ளங்களை திருப்பக்கூடிய அல்லாஹ்வே! உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தை திருப்பி விடுவாயாக!.

16. யாஅல்லாஹ்! (உன் அருட்கொடைகளை) எங்களுக்கு அதிகப்படுத்துவாயாக! எங்களுக்குக் குறைத்துவிடாதே! எங்களை கண்ணியப்படுத்துவாயாக! இழிவு படுத்திவிடாதே! (உனது அருட்கொடைகளை) எங்களுக்குத் தந்தருள்வாயாக! உன் அருளிலிருந்து எங்களை நிராசையற்றவர்களாக ஆக்கிவிடாதே! மற்றவர்களைவிட எங்களுக்கு முன்னுரிமை வழங்குவாயாக! யாஅல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!

17. யாஅல்லாஹ்! உனக்கு மாறு செய்வதை விட்டும் எங்களை தடுக்கக்கூடிய (உன்னைப்பற்றிய) அச்சத்தையும், உன்னுடைய சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் வழிபாட்டையும், உலகச் சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் உறுதியையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக!

யா அல்லாஹ்! எங்களுடைய செவிப்புலன்களையும், பார்வைகளையும் (உடல்) சக்திகளையும் நீ எங்களை வாழவைக்கும் காலமெல்லாம் எங்களுக்கு இன்பம் தரக்கூடியவைகளாக ஆக்குவாயாக! (குறைவின்றி இயங்கச் செய்வாயாக!) அதனை எங்கள் வாரிசுகளுக்கும் (சந்ததிகளுக்கும்) ஆக்குவாயாக! எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக! எங்கள்மீது விரோதம் கொண்டவர்களுக்குப் பாதகமாக எங்களுக்கு நீ உதவி செய்வாயாக! இவ்வுலகையே எங்கள் நோக்கமாகவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே! எங்களுடைய மார்க்கத்தில் எங்களுக்கு சோதனைகளை ஏற்படுத்திவிடாதே! எங்களின் பாவங்களினால் எங்கள்மீது இரக்கம் காட்டாத, உன்னை பயப்படாதவனை எங்கள் மீது பொறுப்பாளியாக ஆக்கிவிடாதே!

யாஅல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும், உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும் நிலையையும் அனைத்து நல்லறங்களின் பிரதிபலன்களையும் அனைத்து பாவங்களைவிட்டும் பாதுகாப்பையும் சொர்க்கத்தைப்பெற்று, வெற்றிபெற, நரகை விட்டும் ஈடேற்றம்பெற (அருள் புரியுமாறும்) நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.

18. யாஅல்லாஹ்! எங்களின் பாவங்களை நீ மன்னிக்காமல் விட்டுவிடாதே! குறைகளை மறைக்காமல் விட்டுவிடாதே! கவலையைப் போக்காமல் விட்டுவிடாதே! கடனை அடைக்காமல் விட்டுவிடாதே! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! உலக மற்றும் மறுமையின் தேவைகளில் அதில் உனக்கு பொருத்தமும் எங்களுக்கு வெற்றியுமுள்ள எத்தேவைகளையும் எங்களுக்கு நிறைவேற்றாமல் விட்டுவிடாதே!

19. யாஅல்லாஹ்! உன்னிடமிருந்து அருளை நிச்சயமாக நான் கேட்கின்றேன். அதனைக் கொண்டே என் உள்ளத்திற்கு நீ நேர்வழி காட்டுகின்றாய். என் காரியங்கள் அனைத்தையும் அதனைக் கொண்டே நீ ஒன்று சேர்க்கின்றாய். என்னுடைய பிரிவினையை அதைக் கொண்டே நீ சீர்படுத்துகின்றாய். என்னுடைய மறைவான விஷயங்களை அதைக்கொண்டே நீ பாதுகாக்கின்றாய். என்னுடைய வெளிப்படையானவைகளையும் அதைக் கொண்டே நீ உயர்த்துகின்றாய். அதைக்கொண்டே (மறுமையில்) என்னுடைய முகத்தை நீ வெண்மைப்படுத்துகின்றாய். அதைக் கொண்டே என்னுடைய அமல்களையும் நீ தூய்மையாக்குகின்றாய். அதைக் கொண்டே எனக்கு நேர்வழியையும் நீ காட்டுகின்றாய். அதைக் கொண்டே குழப்பங்களை என்னைவிட்டும் நீ அகற்றுகின்றாய். அதைக் கொண்டே எல்லாக் கெடுதிகளிலிருந்தும் நீ என்னைப் பாதுகாப்பாயே அப்படிப்பட்ட அருளை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.

20. யாஅல்லாஹ்! தீர்ப்பு நாளில் வெற்றியையும் நற்பாக்கியம் உள்ளவர்களின் வாழ்க்கையையும் ஷுஹதாக்களின் அந்தஸ்தையும் நபிமார்களுடன் சேர்ந்திருப்பதையும் எதிரிகளுக்கு எதிராக எனக்கு உதவி கிடைப்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.

21. யாஅல்லாஹ்! ஈமானில் உறுதியையும் நல்லொழுக்கத்தில் உறுதியையும் வெற்றியைப் பின் தொடரும் லாபத்தையும் உன்னிடமிருந்து அருளையும் நற்பாக்கியங்களையும் பிழை பொறுப்பையும் திருப்பொருத்தத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.

யாஅல்லாஹ்! ஆரோக்கியத்தையும் பத்தினித் தனத்தையும் நற்குணத்தையும் விதியை ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். யாஅல்லாஹ்! என் ஆத்மாவின் கெடுதியிலிருந்தும் இன்னும் உன் ஆதிக்கத்திலுள்ள ஒவ்வொரு மிருகத்தின் கெடுதியிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நிச்சயமாக என் இறைவன் நேரான வழியில் இருக்கின்றான்.

யாஅல்லாஹ்! என் பேச்சை நீ கேட்கின்றாய். என் நிலையினை நீ பார்க்கின்றாய். என் இரகசியத்தையும் பரமரகசியத்தையும் நீ அறிந்திருக்கின்றாய். என் காரியத்தில் எதுவும் உன்னிடம் மறைந்ததாக இல்லை! நான் ஒன்றுமில்லாத ஏழை! இரட்சிப்புத் தேடுபவன்! அபயம் தேடுபவன்! இரக்கத்தன்மையுள்ள, இலகிய உள்ளமுள்ள, செய்த பாவங்களை உன்னிடம் மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்பவன், ஏழையின் வேண்டுகோளாக உன்னிடம் வேண்டுகிறேன். பணிந்த நிலையில் மண்டிடும் பாவியின் மன்றாடுதலாக மன்றாடுகின்றேன். உள்ளம் பயந்த நிலையில் பிரார்த்திப்பவரின் பிரார்த்தனையாக நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன். பிடரியை உனக்கு பணியவைத்து, உடம்பையும் பணியவைத்து, முகத்தையும் மண்ணில் படியவைத்து பயந்த நிலையில் பிரார்த்திப்பவனின் பிரார்த்தனையாக நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்.

நன்றி http://sholapuramrahman.blogspot.com/

1 comments:

Balapiti Aroos சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.