Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, மார்ச் 26

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் குணங்களும்

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் குணங்களும்

-ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி

வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள். மக்களுடைய உள்ளங்களின் ஆழத்தில் அவர்களது கண்ணியம் வேரூன்றி இருந்தது. நபியவர்களை பாதுகாக்க மக்கள் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். இதுபோன்றதொரு மரியாதையையும் மதிப்பையும் வேறு எவரிடமும் இவ்வுலகம் கண்டதில்லை. அவர்களோடு வாழ்ந்தவர்கள் அவர்களை ஆழமாக நேசித்தனர். தங்களின் கழுத்துகள் வெட்டப்படுவதைக் கூட பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், நபியவர்களின் நகத்துக்கு ஓர் இடையூறு ஏற்படுவதை கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். சிறந்த பண்புகளும் அழகிய குணங்களும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்ததுதான் தோழர்களின் இந்த நேசத்திற்குரிய காரணமாகும். நபியவர்களின் குணங்களையும் பண்புகளையும் முழுமையாக நம்மால் விவரிக்க முடியாது என்ற இயலாமையை ஏற்றுக் கொள்வதுடன் அடுத்து வரும் பக்கங்களில் அவற்றைப் பற்றிய அறிவிப்புகளை முடிந்தளவு சுருக்கமாகக் கூறுகிறோம்.

பேரழகு உடையவர்

நபி (ஸல்) ஹிஜ்ரா செய்து மதீனா செல்லும் வழியில் குஜாம்ய்யா கிளையைச் சார்ந்த ‘உம்மு மஅபத்’ என்ற பெண்ணின் கூடாரத்தைக் கடந்துச் சென்றார்கள்.

வீடு திரும்பிய தனது கணவர் விசாரித்த போது நபியவர்களைப் பற்றி உம்மு மஅபத் விவரித்தது யாதெனில்:

பிரகாசமான முகம் உடையவர் அழகிய குணம் பெற்றவர் வயிறோ தலையோ பெருத்தவர் அல்லர் தலை சிறுத்தவரும் அல்லர் கவர்ச்சிமிக்கவர் பேரழகு உடையவர் கருத்த புருவம் கொண்டவர் நீண்ட இமைமுடி பெற்றவர் கம்பீரக் குரல் வளம் கொண்டவர் உயர்ந்த கழுத்துள்ளவர் கருவிழி கொண்டவர் மை தீட்டியது போன்ற கண்ணுள்ளவர் வில் புருவம் கொண்டவர் கூட்டுப் புருவம் கொண்டவர் கருண்ட தலைமுடி கொண்டவர் அவரது அமைதி கம்பீரத்தைத் தரும் ஒளி இலங்கும் பேச்சுடையவர் தூரமாகப் பார்த்தால் அழகும் வனப்பும் பெற்றவராய்த் திகழ்வார் அருகில் சென்றால் பழக இனிமையானவர் நற்பண்பாளர் நாவலர் தெளிந்த நடையுடைய பேச்சாளர் நீளமாகவோ சுருக்கமாகவோ இல்லாமல் நடுத்தரமான சொல்லாற்றல் பெற்றவர் அவருடைய மொழிதல் மணிமாலை உதிர்வது போல் இருக்கும் நடுத்தர உயரமுடையவர் பார்வைக்கு நெட்டையாகவோ குட்டையாகவோ இருக்க மாட்டார் இரண்டு கிளைகளுக்கு இடையிலுள்ள ஒரு கிளையைப் போன்றவர் மூவர் குழுவில் பளிச்செனத் தெரிபவர் சிறந்த கண்ணியம் வாய்ந்தவர் நண்பர்கள் புடை சூழ இருப்பவர் அவர் உரைத்தால் யாவரும் செவிமடுக்கின்றனர் அவர் ஆணையிட்டால் நிறைவேற்ற விரைகின்றனர் பணிவிடைக்குரியவர் மக்கள் கூட்டம் பெற்றவர் கடுகடுப்பானவருமல்லர் பிறரைக் குறைவாக மதிப்பவரும் அல்லர். (ஜாதுல் மஆது)

அலீ இப்னு அபீதாலிப் (ரழி) நபி (ஸல்) அவர்களை வருணித்துக் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) மிக நெட்டையோ மிகக் குட்டையோ இல்லை கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர் அடர்த்தியான சுருட்டை முடி உடையவருமல்லர் கோரைமுடி கொண்டவருமல்லர் சுருட்டை, கோரை இரண்டிற்கும் நடுத்தரமான முடி கொண்டவர் பெருத்த உடம்பில்லை முழுதும் வட்ட வடிவ முகமுமல்ல நேரான கத்தி (ஒடுக்கமான) முகமுமல்ல சிவந்த வெண்மை நிறமானவர் கருவிழி உடையவர் நீண்ட இமை முடி பெற்றவர் புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர் நெஞ்சிலிருந்து தொப்புள் வரை கொடி போன்ற முடி உள்ளவர்கள் உடம்பில் முடி இருக்காது உள்ளங்காலும் கையும் தடித்தவர்கள் அவர்கள் நடந்தால் பள்ளத்தில் நடப்பது போன்று பிடிப்போடு நடப்பார்கள் திரும்பிப் பார்த்தால் முழுமையாகத் திரும்பிப் பார்ப்பார்கள் இரண்டு புஜங்களுக்கு இடையில் நபித்துவ முத்திரை இருக்கும் தூதர்களில் இறுதியானவர் மக்களில் மிக அதிகம் வழங்கும் கை உள்ளவர் துணிவுடைய உள்ளம் கொண்டவர் மக்களில் மிக அதிகம் உண்மை பேசுபவர் மக்களில் பொறுப்புகளை மிக அதிகம் நிறைவேற்றுபவர் மிக மிருதுவானவர் பழக மிகக் கண்ணியமிக்கவர் திடீரெனப் பார்த்தால் அச்சம் தரும் வடிவம் அறிமுகமானவர் அவரை விரும்புவர் அவர்களை யார் வருணித்தாலும் ‘அவர்களுக்கு முன்னும் அவர்களுக்கு பின்னும் அவர்களைப் போன்று யாரையும் பார்த்ததில்லை’ என்றே கூறுவர். (இப்னு ஹிஷாம்)

அலீ (ரழி) கூறுவதாக மற்றொரு அறிவிப்பில் வருகிறது: நபி (ஸல்) கனத்த தலையுள்ளவர் மொத்தமான மூட்டுகளைக் கொண்டவர் நெஞ்சிலிருந்து தொப்புள் வரை கோடு போன்ற முடிகளைக் கொண்டவர் நடந்தால் பள்ளத்தில் நடப்பது போல் நடப்பார். (ஜாமிவுத் திர்மிதி)

ஜாபிர் இப்னு சமுரா (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அகலமான வாய் உடையவர் அகல விழி கொண்டவர் சதை குறைந்த கெண்டைக்கால் பெற்றவர். (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ துஃபைல் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) வெண்மை நிறமுடையவர் அழகிய முகமுடையவர் நடுத்தர உடம்பும், உயரமும் கொண்டவர். (ஸஹீஹ் முஸ்லிம்)

அனஸ் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அகலமான கரமுடையவர்கள் முற்றிலும் சிவந்த நிறம் கொண்டவர் அல்லர். அவர் உயிர் பிரியும் போது தாடியிலும் தலையிலும் சேர்த்து இருபது வெள்ளை முடிகள் கூட இல்லை. நரை இரு பொட்டுப் பகுதியில் (கிருதாப் பகுதியில்) மட்டும் இருந்தது. தலையிலும் மிகக் கொஞ்சமாக நரைமுடி இருந்தது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ ஜுஹைஃபா (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் கீழ் உதட்டுக்கு கீழே கொஞ்சம் முடி வெண்மையாக இருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரழி) கூறுவதாவது: நபி (ஸல்) அவர்களின் கீழ் உதட்டு முடிகளில் சிறிது வெண்மை இருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

பராஃ (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) நடுத்தர உயரமுள்ளவர்கள். அகன்ற புஜம் உடையவர்கள். அவர்களது தலைமுடி காது சோனை வரை இருக்கும். ஒரு நாள் நபி (ஸல்) அவர்களைச் சிவப்பு ஆடையில் பார்த்தேன். அவர்களை விட அழகான எதையும் பார்க்கவில்லை. வேதமுடையவர்களை ஒத்திருக்க வேண்டும் என்ற பிரியத்தில் நபி (ஸல்) தங்களது முடியை வகிடு எடுக்காமல் நேராக சீவிக் கொண்டிருந்தார்கள். பின்பு தங்களது தலைக்கு வகிடு எடுத்து சீவினார்கள். நபி (ஸல்) மக்களில் மிக அழகிய முகமும் குணமும் கொண்டவர்கள். அவர்களிடம் “நபியின் முகம் கத்தியைப் போன்று இருந்ததா?” எனக் கேட்க “சந்திரனைப் போல், அதாவது சற்று வட்ட வடிவ முகம் உடையவர்களாக இருந்தார்கள்” என்று பதிலளித்தார். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ருபய்யி பின்த் முஅவ்வித் (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களை நீ பார்த்தால் அவர்கள் உதிக்கும் அதிகாலை சூரியனைப் போல் இலங்குவார்கள். (முஸ்னத் தாரமி, மிஷ்காத்)

ஜாபிர் இப்னு சமுரா (ரழி) அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் சந்திர இரவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன். நபி (ஸல்) சிவப்பு ஆடை அணிந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்களையும் சந்திரனையும் மாறி மாறிப் பார்த்தேன். நபி (ஸல்) அவர்களே எனக்கு மிக அழகாக தென்பட்டார்கள். (ஷமாயிலுத் திர்மிதி, மிஷ்காத்)

அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களை விட மிக அழகான எதையும் நான் பார்த்ததில்லை. அவர்களது வதனத்தில் சூரியன் இலங்கியது. அவர்களை விட வேகமாக நடப்பவர்களை நான் கண்டதில்லை. பூமி அவர்களுக்கு சுருட்டப்பட்டது போல் இருக்கும். நாங்கள் சிரமத்துடன் நடப்போம். நபி (ஸல்) அவர்களோ சிரமம் தெரியாமல் நடப்பார்கள். (ஜாமிவுத் திர்மிதி, மிஷ்காத்)

கஅப் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் சிரித்தால் அவர்களது முகம் மிக ஒளி பொருந்தியதாக, பார்ப்பவர்களுக்கு சந்திரனைப் போன்று இருக்கும். (ஸஹீஹுல் புகாரி)

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் செருப்பு தைத்துக் கொண்டிருக்க, ஆயிஷா (ரழி) ஓர் ஆடையை நெய்து கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) உடலில் இருந்து வியர்வை வந்தது. நபி (ஸல்) அவர்களின் முக ரேகைகள் ஒளியால் இலங்கிக் கொண்டிருந்தன. இதைக் கண்ட ஆயிஷா (ரழி) திடுக்கிட்டார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ கபீர் ஹுதலி தங்களைப் பார்த்தால் தமது

“அவரது முக ரேகைகளை நீங்கள் பார்த்தால்
மின்னும் நட்சத்திரத்தைப் போன்று இலங்குவதைப் பார்க்கலாம்.” (தஹ்தீப் தாரீக் திமஷ்க்)

என்ற கவிகளுக்கு பிறரை விட நீங்களே பொருத்தமானவர்” என்று கூறுவார்.

நபி (ஸல்) அவர்களைப் பார்த்தால் அபூபக்ர் (ரழி),

நம்பிக்கைக்குரியவர் தெரிவு செய்யப்பட்டவர்
நன்மைக்கு அழைப்பவர் இருள் நீங்கிய சந்திரனைப் போன்றவர். (குலாஸத்துஸ் ஸியர்)

என்ற கவிதையைக் கூறுவார்கள்.

ஜுஹைர் என்ற கவிஞர் ஹரீம் இப்னு சினானுக்கு படித்த கவிதையை நபி (ஸல்) அவர்களுக்கு உமர் (ரழி) கூறுவார்கள்.

“நீ மனிதனல்லாத வேறு படைப்பாக இருந்திருந்தால்,
பவுர்ணமி இரவின் நிலவாக இருந்திருப்பாய்.”

இக்கவிதையைப் பாடிவிட்டு உண்மையில் நபி (ஸல்) அப்படித்தான் இருந்தார்கள் என்று கூறுவார்கள். (குலாஸத்துஸ் ஸியர்)

நபியவர்கள் கோபித்தால் முகம் சிவந்துவிடும். மாதுளம் பழ முத்துக்களை முகத்தில் தூவப்பட்டது போன்றிருக்கும். (ஸுனனுத் திர்மிதி, மிஷ்காத்)

ஜாபிர் இப்னு சமுரா (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மெல்லிய கெண்டைக்கால் உடையவர்கள். அவர்களது சிரிப்பு புன்முறுவலாகத்தான் இருக்கும். அவர்களைப் பார்த்தால் கண்ணில் ‘சுர்மா’ இட்டதைப் போல் இருக்கும். ஆனால், சுர்மா இட்டவல்லை. (ஜாமிவுத் திர்மிதி)

உமர் இப்னு கத்தாப் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அழகிய பற்களைக் கொண்டவர்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அகன்ற முன் பற்கள் உடையவர்கள் அவர்கள் பேசினால் பற்களின் இடைவெளியிலிருந்து பிரகாசம் வெளியேறுவது போன்றிருக்கும் அவர்களது கழுத்து தூய்மையான வெள்ளிச் சிலையின் கழுத்தைப் போல் இருக்கும் அவர்களது இமை முடி நீளமாக இருக்கும். தாடி அடர்த்தியாக, நெற்றி விசாலமாக இருக்கும் புருவம் அடர்ந்து வில் வடிவம் பெற்றிருக்கும் நீண்ட மெல்லிய மூக்குடையவர். மிருதுவான மெல்லிய கன்னமுடையவர். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை குச்சிப் போல முடி இருக்கும். வயிற்றிலோ நெஞ்சிலோ அதைத் தவிர முடி இருக்காது. குடங்கையிலும் தோள் புஜத்திலும் முடி இருக்கும். மார்பும் வயிறும் சமமானவர். அகன்ற மார்பும், நீளமான மணிக்கட்டும், விசாலமான உள்ளங்கையும் உள்ளவர் நீளமான முன் கையும், கெண்டைக்காலும் உள்ளவர் உள்ளங்கால் நன்கு குவிந்தவர்கள் விரல்கள் நீளமாக இருக்கும் அவர்கள் நடந்தால் கால்களை எடுத்து வைப்பவரைப் போல் பணிவுடனும் முன் பக்கம் சாய்ந்தவராகவும் நடப்பார்கள். (குலாஸத்துஸ் ஸீரா, தாரமி, மிஷ்காத்)

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் கையைவிட மென்மையான பட்டாடையை நான் தொட்டதில்லை. அவர்களிடமிருந்து வரும் நறுமணத்தைப் போன்று வேறு எந்த நறுமணத்தையும் நான் நுகர்ந்ததில்லை.

மற்றொரு அறிவிப்பில்: நபி (ஸல்) அவர்களிடமிருந்து வரக்கூடிய நறுமணத்தைவிட வேறு நறுமணத்தை அம்பலோ அல்லது கஸ்தூயிலோ நான் நுகர்ந்ததில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ ஜுஹைஃபா (ரழி) கூறுகிறார்கள்: ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கரத்தை எடுத்து என் கன்னத்தில் வைத்தேன். அது பனிக் கட்டியை விட குளிர்ச்சியாக, கஸ்தூரியை விட மணமிக்கதாக இருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

ஜாபிர் இப்னு சமுரா (ரழி) கூறுகிறார்கள்: நான் சிறுவனாக இருந்த போது எனது கன்னத்தை நபி (ஸல்) அவர்கள் தடவினார்கள். அவர்களது கை மிகக் குளிர்ச்சியாகவும், அத்தர் பாட்டிலிருந்து கையை எடுத்தது போன்று மிக்க நறுமணமாகவும் இருந்தது. (ஸஹீஹ் முஸ்லிம்)

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் வியர்வை, முத்துகள் போல் இருக்கும். (ஸஹீஹ் முஸ்லிம்)

உம்மு சுலைம் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் வியர்வை மிக உயர்ந்த நறுமணமாக இருக்கும்.

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) ஒரு பாதையில் சென்றிருக்க அதே பாதையில் மற்றொருவர் செல்கிறார் என்றால் அவர் அவ்வழியில் நபி (ஸல்) சென்றுள்ளார்கள் என்பதை அவர்களது வாடையின் மூலம் அறிந்து கொள்ளலாம். (மிஷ்காத், முஸ்னத் தாரமி)

நபி (ஸல்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கு மத்தியில் புறாவின் முட்டையைப் போல் மேனி நிறத்திலேயே நபித்துவ முத்திரை இருந்தது. அது இடது புஜத்திற்கு மேல் மிருதுவான தசைக்கு அருகில் மச்சம் போன்று இருந்தது. (ஸஹீஹ் முஸ்லிம்)

உயர் பண்பாளர்

நபி (ஸல்) அவர்கள் தௌ;ளத் தெளிவாக இலக்கிய நயத்துடன் மொழிபவர்களாக இருந்தார்கள். இதனால் மக்களில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள். மக்களில் யாரும் அவர்களை அறியாமல் இருக்க முடியாது. நல்லியல்பு பெற்றவர்கள். அவர்களுடைய பேச்சு சரளமாகவும், சொல் தெளிவாகவும், கருத்து சரியானதாகவும் இருக்கும். ஆனால், அதற்காக சிரமம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களது சொல்லாக்கம் முழுமை பெற்றதாக இருக்கும். நூதனமான நுட்பங்களால் சிறப்பிக்கப்பட்டவர்கள். அரபிய மொழிகளின் பல வகைகளைத் தெரிந்திருந்தார்கள். ஒவ்வொரு இனத்தாரிடம் அவரவர் பாணியில் அவரவர் தொனியில் உரையாற்றுவார்கள். நகரவாசிகளைப் போல் இலக்கியமாகவும், கிராமவாசிகளைப் போல் எளிய முறையிலும் அவரவர் நடைக்கேற்ப பேசுவார்கள். இது மட்டுமின்றி வஹியினால் இறை உதவியைப் பெற்றிருந்தார்கள்.

சகித்துக் கொள்வதும், பொறுத்துப் போவதும், சக்தியிருந்து மன்னிப்பதும், சிரமங்களைத் தாங்கிக் கொள்வதும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய இயற்கைப் பண்புகளாகும். எத்தனையோ அறிவாளிகள், மேதாவிகள் சமயத்தில் சருக்கலாம். பொறுமைசாலிக்கும் சமயத்தில் கோபம் தலைக்கேறலாம். இடையூறு அதிகமான போது நபி (ஸல்) அவர்களின் சகிப்புத் தன்மை அதிகரித்தது. மூடனின் வரம்பு மீறல் நபி (ஸல்) அவர்களுக்குப் பொறுமையைத்தான் தந்தது.

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அதில் மிக எளிதானவற்றையே எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அது பாவமாக இருக்கக் கூடாது. அது பாவமானதாக இருந்தால் அதை விட்டு வெகு தூரம் சென்று விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்காகப் பழிவாங்கியதில்லை. எனினும், அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால் அல்லாஹ்வுக்காக பழிவாங்குவார்கள். மெதுவாக கோபம் வரும். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். கணக்கிட முடியாத அளவு தான தர்மங்களை வழங்கி வந்தார்கள். வறுமைக்கு அஞ்சாமல் ஏழை எளியோருக்கு தேவையுடையோருக்கு செலவு செய்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மக்களில் மிகக் கொடைத் தன்மையுடையவர்களாக விளங்கினார்கள். வானவர் ஜிப்ரீல், நபி (ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும் நாட்களில் மிக அதிகம் நபி (ஸல்) கொடையளிப்பார்கள். ஜிப்ரீல் ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து குர்ஆனை பரிமாறிக் கொள்வார்கள். அக்காலங்களில் விரைந்து வீசும் காற்றின் வேகத்தை விட செல்வங்களை வாரி வழங்குவார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஜாபிர் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஏதாவதொன்று கேட்கப்பட்டு, அவர்கள் அதை இல்லை என்று சொன்னதில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் வீரமும் துணிவும் யாரும் அறியாத ஒன்றல்ல. நபி (ஸல்) அவர்கள் மக்களில் மிகுந்த துணிச்சல் கொண்டவர்களாக விளங்கினார்கள். எத்தனையோ அபாயமான நிலைகளைச் சந்தித்துள்ளார்கள். தங்களிடமுள்ள வாள் வீச்சு வீரர்களும், அம்பெறியும் வீரர்களும் அவர்களைத் தனிமையில் பலமுறை விட்டுவிட்டு சென்றுவிட்ட போதிலும் நிலைகுலையாமல், தடுமாற்றமில்லாமல், புறுமுதுகுக் காட்டாமல், எதிரிகளை எதிர்த்து நின்றார்கள். எத்தனையோ வீரர்கள் ஒரு சில நேரங்களில் புறமுதுகு காட்டி ஓடி இருக்கின்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்ததில்லை.

அலீ (ரழி) கூறுகிறார்கள்: போர் சூடுபிடித்து கண்கள் சிவந்து விடும்போது நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கருகே சென்று எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம். எதிரிகளுக்கு அருகில் நபி (ஸல்) அவர்களைத் தவிர எங்களில் எவரும் நெருக்கமாக இருந்ததில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி)

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: மதீனாவாசிகள் ஒரு நாள் இரவு சப்தத்தைக் கேட்டு பயந்து விட்டனர். சப்தம் வந்த திசையை நோக்கி மக்கள் விரைந்து செல்கையில் அதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் சென்று விவரத்தை அறிந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கழுத்தில் வாளை தொங்கவிட்டுக் கொண்டு அபூ தல்ஹாவுக்குரிய குதிரையில் எவ்வித சேனம் கடிவாளம் ஏதுமின்றி சென்று வந்தார்கள். மக்களைப் பார்த்து “நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை பயப்பட வேண்டியதில்லை” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் மிகக் கூச்சச் சுபாவமுள்ளவராக இருந்தார்கள்.

அபூ சயீத் குத் (ரழி) கூறுகிறார்கள்: திரை மறைவிலுள்ள கன்னிப் பெண்களை விட அதிக நாணமுள்ளவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். ஏதாவது பிடிக்காவிட்டால் அதை அவர்களது முகத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். எவரது முகத்தையும் ஆழமாக உற்று நோக்கியதில்லை. பார்வையைக் கீழ்நோக்கி வைத்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் மேல் நோக்கி பார்ப்பதை விட கீழ்நோக்கி பார்ப்பதே அதிகம். பெரும்பாலும் கடைக்கண்ணால் பார்ப்பார்கள். வெட்கத்தினாலும் உயர்ந்த பண்பின் காரணத்தாலும் யாரையும் வெறுப்பூட்டும்படி பேச மாட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஒருவரைப் பற்றி விரும்பாத செய்தி தங்களுக்குக் கிடைத்தால் அப்போது நபி (ஸல்) அவர்கள் “சிலர் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?” என்பார்கள். அவருடைய பெயரைக் குறிப்பிட்டு சங்கடப்படுத்த மாட்டார்கள்.

“நாணத்தால் பார்வையைத் தாழ்த்துகிறார்!
அவர் மீது பயத்தால் பார்வை குனிகிறது.
அவர் புன் முறுவல் பூத்தால்தான் அவருடன் பேச முடியும்.”

என்ற ஃபரஸ்தக்கின் கவிக்கு நபி (ஸல்) அவர்களே மிகத் தகுதியுள்ளவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்களில் “மிக்க நீதவானாக, ஒழுக்க சீலராக, உண்மையாளராக, நம்பிக்கையாளராகத் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் இப்பண்புகளை உடன் இருந்தவர்கள் மட்டுமல்ல எதிரிகள் கூட நன்கு அறிந்து வைத்திருந்தனர். நபித்துவம் கிடைக்கும் முன்பே அவர்களை ‘நம்பிக்கைக்குரியவர் (அல் அமீன்)’ என்று மக்கள் அழைத்தனர். இஸ்லாம் வருவதற்கு முன்பே அறியாமைக் காலத்தில் கூட மக்கள் தங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு நாடி அவர்களிடம் வருவார்கள்.

அலீ (ரழி) கூறுகிறார்கள்: ஒருமுறை நபியவர்களை பார்த்த அபூஜஹ்ல் “நாங்கள் உங்களை பொய்ப்பிக்கவில்லை. நீங்கள் சொல்கின்ற மார்க்கத்தைத் தான் பொய்ப்பிக்கிறோம்” என்றான். இது விஷயமாக அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே! உங்களைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உங்களுக்குக் கவலையைத் தருகின்றது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உங்களைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர். (அல்குர்ஆன் 6:33) (மிஷ்காத், ஸுனனுத் திர்மிதி)

அன்றொரு நாள் மன்னன் ஹிர்கல் (ஹெர்குலிஸ்) அவையிலே அபூ ஸுஃப்யான் எதிரியாக இருந்தும் நபியவர்களைப் பற்றிக் கூறிய உரையாடல் நினைவுகூரத் தக்கது. “அவர் (நபி) இஸ்லாமைப் பற்றிக் கூறுவதற்கு முன்பு, பொய் பேசியுள்ளார் என்று அவர் மீது நீங்கள் பழி சுமத்தி இருக்கிறீர்களா?” என்று மன்னன் கேட்க, அதற்கு அபூ ஸுஃப்யான், “அவ்வாறு அவர் ஒருபோதும் பொய் பேசியதில்லை” என்று கூறினார்.

நபி (ஸல்) மற்றவர்களை விட அதிகம் பணிவுடையவர்களாகவும், பெருமை கொள்வதை விட்டு விலகியவர்களாகவும் இருந்தார்கள். மக்கள் அரசர் முன்பு எழுந்து நிற்பது போன்று தன் முன் எழுந்து நிற்பதைத் தடை செய்தார்கள். நலிந்தோர்களையும், நோயாளிகளையும் நலம் விசாரிப்பார்கள். ஏழைகளுடன் சேர்ந்திருப்பார்கள். அடிமை விருந்துக்கு அழைத்தாலும் இன் முகத்துடன் ஏற்றுக் கொள்வார்கள். தங்களுடைய தோழர்களுடன் அவர்களில் ஒருவராக அமர்ந்திருப்பார்கள்.

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) தங்களது காலணிகளையும், தங்களது ஆடைகளையும் தாங்களே தைத்துக் கொள்வார்கள். உங்களில் ஒருவர் வீட்டில் வேலை செய்வது போன்றே நபியவர்களும் தங்களுடைய வீட்டில் வேலை செய்வார்கள். மனிதர்களில் ஒருவராகவே இருந்தார்கள். தங்களது ஆடைகளைத் தானே சுத்தம் செய்வார்கள். தனது ஆட்டில் தானே பாலைக் கறப்பார்கள். தங்களது வேலைகளைத் தானே செய்து கொள்வார்கள். (மிஷ்காத்)

மற்றெவரையும் விட அதிகம் நபி (ஸல்) வாக்குகளை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள். உறவினர்களுடன் சேர்ந்து நெருக்கமாக வாழ்ந்தார்கள். மக்கள் மீது மிக்க அன்பும் பாசமும் கருணையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மிக அழகிய முறையில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மக்களில் மிக உன்னதமான குணம் பெற்றிருந்தார்கள். அவர்களிடம் எந்தக் கெட்ட குணமும் இருந்ததில்லை. அருவருப்பான சொல், செயல் ஏதும் அவர்களிடம் இருந்ததில்லை. சபிக்கும் வழக்கமோ, கடைத் தெருக்களில் கூச்சல் போடும் பேதைமையோ கிடையாது. கெட்டதைக் கெட்டதை கொண்டு நிவர்த்தி செய்ய மாட்டார்கள். மாறாக, அதனை மன்னித்து மறந்து விடுவார்கள். எவரையும் தனக்குப் பின்னால் நடக்க அனுமதிக்க மாட்டார்கள். உடையிலோ ஆடையிலோ தங்களுடைய அடிமைகளைக் காட்டிலும் தம்மை உயர்வாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். தங்களுக்கு பணிவிடை செய்தவர்களுக்குப் பணிவிடை செய்வார்கள். தங்களதுப் பணியாளரை ‘சீ’ என்று கூட கூறியதில்லை. ஒரு செயலை செய்ததற்காகவோ, செய்யாமல் போனதற்காகவோ யாரையும் கண்டித்ததில்லை.

நபி (ஸல்) தோழர்களை அதிகம் நேசித்து, அவர்களுடன் அதிகம் பழகுவார்கள். அவர்களுடைய ஜனாஸாக்களிலும் கலந்து கொள்வார்கள். ஏழையை அவரது இல்லாமையினால் இளக்காரமாகப் பார்க்க மாட்டார்கள்.

ஒரு பயணத்தின் போது ஆடு ஒன்றை அறுத்து சமைக்கும்படி கூறினார்கள். ஒருவர் நான் அறுக்கிறேன் என்றார் ஒருவர் உரிக்கிறேன் என்றார் ஒருவர் சமைக்கிறேன் என்றார் நபி (ஸல்) “அதற்காக நான் விறகுகளை சேர்த்து வருவேன்” என்றார்கள். அதற்கு தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு ஏன் சிரமம்! நாங்கள் இதைச் செய்து கொள்கிறோம்” என்றனர். அப்போது நபி (ஸல்) “உங்களால் செய்ய முடியும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் உங்களில் என்னைத் தனியே உயர்த்திக் காட்ட விரும்பவில்லை. ஏனெனில், ஒருவர் தனது தோழர்களில் தனியாக வேறுபடுத்திக் காட்டுவதை அல்லாஹ் வெறுக்கிறான்” என்று கூறி விறகுகளைச் சேகரிக்கச் சென்றார்கள். (குலாஸத்துஸ் ஸியர்)

நபியவர்களை ந்து வருணிப்பதை நாம் கேட்போம்: “நபி (ஸல்) தொடர் கவலைக் கொண்டவர்கள் நிரந்தரச் சிந்தனையுடையவர்கள் அவர்களுக்கு ஓய்வு கிடையாது தேவையின்றி பேசமாட்டார்கள் நீண்ட நேரம் அமைதியாக இருப்பார்கள் பேசினால் வாய் நிரம்பப் பேசுவார்கள் பேச்சை முடிக்கும் போது முழுமையான வார்த்தைகளைக் கொண்டு முடிப்பார்கள். கருத்தாழமுள்ள வாக்கியங்களால் உரையாற்றுவார்கள் தெளிவாகப் பேசுவார்கள் அது தேவையை விட குறைவாகவோ அதிகமாகவோ இருக்காது. முரட்டுக் குணம் கொண்டவரும் இல்லை அற்பமானவரும் இல்லை அல்லாஹ்வின் அருட்கொடை குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக மதிப்பார்கள் எதையும் இகழமாட்டார்கள் உணவுகளைப் புகழவோ குறைகூறவோ மாட்டார்கள்.

சத்தியத்திற்கு பங்கம் விளைவித்தால் அவர்களுடைய கோபத்திற்கு முன் யாரும் நிற்க முடியாது பழிவாங்கியே தீருவார்கள். தங்களுக்காக கோபப்படவோ, பழிவாங்கவோ மாட்டார்கள் சந்தோஷம் மிகுந்தால் தங்களது பார்வையைத் தாழ்த்திக் கொள்வார்கள் பெரும்பாலும் புன்முறுவலாகவே சிரிப்பார்கள் சிரிக்கும் போது பற்கள் பனிக்கட்டிகளைப் போல் காட்சியளிக்கும் தேவையற்றதைப் பேசாமல் தங்களது நாவைப் பாதுகாத்துக் கொண்டு தேவையானவற்றையே பேசுவார்கள் தங்களது தோழர்களிடையே நட்பை ஏற்படுத்துவார்கள் பிரிக்க மாட்டார்கள் ஒவ்வொரு சமுதாயத்தின் சிறப்புக்குரியோர்களைத் தானும் கண்ணியப்படுத்திச் சிறப்பிப்பார்கள் அவரையே அவர்களின் நிர்வாகியாக நியமிப்பார்கள் ஒருவருடைய தீங்கினால் அவரிடமிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள், முற்றிலும் அவரை விட்டு முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார்கள் காணாத தங்களின் தோழர்களைப் பற்றி அக்கரையாக விசாரிப்பார்கள் மக்களிடம் அவர்களின் நிலவரங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள் நல்லதை நல்லது என்றும் சரியானதென்றும் கூறுவார்கள் கெட்டதைக் கெட்டதென்று உரைத்து அதனைப் புறக்கணித்து விடுவார்கள்.

நடுநிலையாளர்கள் முரண்பட மாட்டார்கள் மக்கள் மறந்து விடுவார்கள் என்பதால் அவர்கள் எதையும் மறவாமல் இருப்பார்கள் எல்லா நிலைகளிலும் ஆயத்தமாக இருப்பார்கள் சத்தியத்தில் குறைவு செய்யவோ அதை மீறவோ மாட்டார்கள் மக்களில் சிறந்தவர்தான் நபியவர்களுடன் இருப்பர். நபியவர்களிடம் மிகச் சிறப்பிற்குரியவர்கள் யாரெனில், மக்களுக்கு அதிகம் நன்மையை நாடுபவர்கள்தான் அதிகம் மக்களுக்கு உதவி உபகாரம் புரிபவர்கள்தான் நபியிடம் மிக்க கண்ணியத்திற்குரியவராக இருப்பர் அமர்ந்தாலும் எழுந்தாலும் அல்லாஹ்வையே நினைவு கூர்வார்கள் சபைகளில் தனக்காக இடத்தைத் தெரிவு செய்து கொள்ள மாட்டார்கள் சபைக்குச் சென்றால் சபையின் இறுதியிலேயே அமர்ந்து கொள்வார்கள் அவ்வாறே பிறரையும் பணிப்பார்கள் தன்னுடன் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவருடனும் உரையாடுவார்கள் தன்னைவிட யாரும் நபியவர்களிடம் உயர்ந்தவர் இல்லை, தானே நபியவர்களிடம் நெருக்கமானவர் என்று ஒவ்வொருவரும் எண்ணுமளவுக்கு நடந்து கொள்வார்கள்.

ஒருவர் ஏதாவது தேவைக்காக வந்தால் அவராகச் செல்லும் வரை அவருடன் நபி (ஸல்) இருப்பார்கள் தேவையை கேட்கும் போது அதனை நிறைவேற்றித் தருவார்கள் அல்லது அழகிய பதிலைக் கூறுவார்கள் நபி (ஸல்) தங்களது தயாளத் தன்மையையும் நற்குணங்களையும் அனைத்து மக்களுக்கும் விசாலப்படுத்தியிருந்தார்கள். எனவே, மக்களுக்கு ஒரு தந்தையைப் போல் திகழ்ந்தார்கள். உரிமையில் அவர்களிடம் அனைவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்தார்கள். இறையச்சத்தைக் கொண்டே மக்களுடைய சிறப்புகள் நிர்ணயிக்கப்பட்டன. கல்வி, கண்ணியம், பொறுமை, சகிப்புத் தன்மை, வெட்கம், நம்பிக்கை அனைத்தும் நிறைந்ததாக அவர்களது சபை இருந்தது. அங்கு உரத்த குரல்கள் ஒலிக்காது கண்ணியம் குலைக்கப்படாது தவறுகள் நிகழாது இறையச்சத்தால் ஒருவருக்கொருவர் பிரியத்துடன் நடந்துகொள்வர் பெயரிவருக்கு கண்ணியமும் சிறியவர்களுக்கு இரக்கமும் காட்டுவார்கள் தேவையுடையோருக்கு உதவி செய்வார்கள் புதியவர்களுடன் நட்புடன் நடந்து கொள்வார்கள்.

எப்பொழுதும் மலர்ந்த முகமும், இளகிய குணமும், நளினமும் பெற்று இருப்பார்கள் கடுகடுப்பானவரோ, முரட்டுக் குணம் கொண்டவரோ, கூச்சலிடுபவரோ, அருவருப்பாகப் பேசுபவரோ, அதட்டுபவரோ, அதிகம் புகழ்பவரோ அல்லர் விருப்பமற்றதைக் கண்டுகொள்ள மாட்டார்கள் நிராசையாகவும் மாட்டார்கள்.

மூன்று குணங்களை விட்டு தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள்:

1) முகஸ்துதி,

2) அதிகம் பேசுவது,

3) தேவையற்றவற்றில் ஈடுபடுவது.

மக்களைப் பற்றி மூன்று காரியங்களைத் தவிர்த்துக் கொண்டார்கள்:

1) பிறரைப் பழிக்க மாட்டார்கள்,

2) பிறரைக் குறைகூற மாட்டார்கள்,

3) பிறரின் குறையைத் தேடமாட்டார்கள்.

நன்மையானவற்றைத் தவிர வேறெதுவும் பேசமாட்டார்கள் அவர்கள் பேசினால் சபையோர்கள் அமைதி காப்பர்கள் தங்களின் தலைமீது பறவை அமர்ந்திருப்பது போல் அசையாமல் இருப்பார்கள் நபி (ஸல்) அமைதியானால் தோழர்கள் பேசுவார்கள் நபியின் முன் பேசும்போது தோழர்கள் போட்டியிட்டுக் கொள்ள மாட்டார்கள். யாராவது பேசத் தொடங்கினால் அவர் முடிக்கும் வரை அவருக்காக அமைதி காப்பார்கள் முதலில் பேசியவன் பேச்சை ஏற்பார்கள் மக்கள் சிரிப்பதைக் கண்டு தானும் சிரிப்பார்கள் மக்கள் ஆச்சரியப்படுபவற்றைக் கண்டு தானும் ஆச்சரியப்படுவார்கள் புதியவன் முரட்டுப் பேச்சை சகித்துக் கொள்வார்கள் தேவையுடையோரை நீங்கள் பார்த்தால் அவர்களின் தேவையை நிறைவேற்றுங்கள் என்பார்கள் உதவி உபகாரம் பெற்றவர் நன்றி கூறினால் மட்டும் ஏற்றுக் கொள்வார்கள். (ஷமாயிலுத் திர்மிதி, அஷ்ஷிஃபா)

காஜா இப்னு ஜைத் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) சபையினில் கண்ணியத்திற்குரிய வர்களாக தோற்றம் அளிப்பார்கள் தங்களது உடல் உறுப்புகளில் எதையும் வெளிக்காட்ட மாட்டார்கள் அதிகம் மௌனம் காப்பார்கள். தேவையற்றதைப் பேசமாட்டார்கள் அழகிய முறையில் உரையாடாத வரை புறக்கணித்து விடுவார்கள் அவர்கள் புன்முறுவலாகவே சிரிப்பார்கள் அவர்களின் பேச்சு தெளிவாக இருக்கும் தேவையை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்காது நபியவர்களின் கண்ணியத்தை முன்னிட்டும் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு முன் தோழர்கள் புன்முறுவலாகவே சிரிப்பார்கள். (அஷ்ஷிஃபா)

சுருங்கக் கூறின் நபி (ஸல்) முழுமை பெற்ற தன்மைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள். நற்பண்புகளில் அவர்களுக்கு நிகர் கிடையாது. அல்லாஹ் நபியவர்களுக்கு மிக அழகிய முறையில் ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுத்தான்.

“நிச்சயமாக நீங்கள் நற்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்.” (அல்குர்ஆன் 68:4)

என்று அவர்களைப் புகழ்ந்து கூறியிருக்கிறான்.

இந்த நற்பண்புகள் நபியவர்கள் மீது மக்களுக்கு விருப்பத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது. இப்பண்புகள் அவர்களை உள்ளங்கவர் தலைவராகத் திகழச் செய்தது. முரண்டு பிடித்த அவரது சமுதாய உள்ளங்களைப் பணிய வைத்தது. மக்களைக் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் சேர்த்தது.

இதுவரை நாம் நபி (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறிய நற்பண்புகள் அவர்களது மகத்தான தன்மைகளின் சிறு கோடுகளே. அவர்களிடமிருந்த உயர்ந்த பண்புகளின் உண்மை நிலைமையையும் அதன் ஆழத்தையும் எவராலும் அறிந்து கொள்ள முடியாது. தனது இறைவனின் பிரகாசத்தால் ஒளிபெற்று, குர்ஆனை தனது பண்புகளாகக் கொண்டு, மேன்மையின் உச்சக்கட்டத்தை அடைந்த, மனித சமுதாயத்திலேயே மிக மகத்தானவன் உண்மையை அறிந்து கொள்ள யாரால்தான் முடியும்?

அல்லாஹ்வே! முஹம்மதின் மீதும், முஹம்மதின் கிளையார்கள் மீதும் உனது தனிப்பட்ட கருணையை அருள்வாயாக! இப்றாஹீமின் மீதும் இப்றாஹீமின் கிளையார்கள் மீதும் உனது தனிப்பட்ட கருணையை அருளியது போன்று நிச்சயமாக நீயே புகழுக்குரியவன் கண்ணித்திற்குரியவன். அல்லாஹ்வே! முஹம்மதின் மீதும் முஹம்மதின் கிளையார்கள் மீதும் அருள் வளங்களை அருள்வாயாக! இப்றாஹீமின் மீதும் இப்றாஹீமின் கிளையார்கள் மீதும் அருள் வளங்களை நீ அருள் செய்தது போன்று நிச்சயமாக நீயே புகழுக்குரியவன் கண்ணியத்திற்குரியவன்.

நன்றி:- ஆசிரியர் : ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி (அர்ரஹீக்குல் மக்தூம் -ரஹீக்)

நன்றி:- http://www.tamililquran.com/mohamed_main.asp

Source: http://azeezahmed.wordpress.com