Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், மார்ச் 21

வட்டியின் அடையாள அட்டை

வட்டியின் அடையாள அட்டை


வட்டிக் கொடுமையைப் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரையாக சத்தியமார்க்கம்.காம் வாசக சகோதரி ஹாஜிரா தாஜுன் எழுதி அனுப்பியதை இங்குப் பதிப்பதில் மகிழ்கிறோம்! எல்லாம் வல்ல அல்லாஹ் வட்டியின் அனைத்து வழிகளிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பானாக!

அடையாள அட்டை

பெயர்

:

வட்டி

புனைப்பெயர்

:

இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சி, உயிர்க்கொல்லி

உடன் பிறந்தோர்

:

ஒரு பைசாவிலிருந்து பல பைசா வட்டி வகைகள், கந்து, மீட்டர், இன்ஷூரன்ஸ், வங்கிக் கடன், நிதியுதவி (எ) ஃபைனான்ஸ், க்ரெடிட் கார்டு வட்டிகள்

நண்பர்கள்

:

பணக்கார ஃபைனான்ஸியர்கள், சேட்டுகள், வட்டிக்குக் கடன் கொடுப்போர், லேவாதேவிக்காரர்கள்

எதிரி

:

தர்மம், ஸகாத்

தொழில்

:

சுரண்டல்

உபதொழில்

:

தற்கொலைக்குத் தூண்டுதல், கற்பை நஷ்ட ஈடாகப் பெறுதல்

முகவரி

:

வங்கிகள், அடகுக்கடை, ஃபைனான்ஸ் (நிதி நிறுவனங்கள்)

விருப்பம்

:

சொத்து, உயிர், கற்பு

வெறுப்பு

:

தனக்கெதிரான பிரச்சாரம், வட்டியில்லாக் கடன்

எதிர்காலத் திட்டம்

:

கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பது

சாதனை

:

உலக வங்கியில் வட்டிக்குக் கடன் வாங்கியதில் இந்தியாவுக்கு முதலிடம் (ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் 24,000 ரூபாய் கடன்).

பரிசு

:

நிரந்தர நரகம்


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).


அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, எந்தவிதமான கஷ்ட காலங்களிலும் வட்டியின் பக்கம் மட்டும் தலைசாய்த்து விடாதீர்கள். ஏனெனில் வட்டி சம்பந்தப்பட்ட அனைத்தையும் அல்லாஹ் வெறுக்கின்றான்.

இதைப்பற்றி, அல்லாஹ் தன் திருமறையில்,

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை ( (2:276) என்றும்,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக் கூடிய வட்டியை(வாங்கி)த் தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி(இதைத் தவிர்த்து)க் கொண்டால் வெற்றியடைவீர்கள் (3:130) என்றும் எச்சரிக்கிறான்.

"வட்டி வாங்குபவர்கள், வட்டி கொடுப்பவர்கள், அதை எழுதுபவர்கள் மற்றும் ஸதகா கொடுக்க மறுப்பவர்கள் இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். - அறிவிப்பாளர் : அலீ (ரலி); திர்மிதி 5347.

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். - அவ்னிப்னி அபீ ஜுஹைஃபா (ரலி); புகாரீ 2086.

"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "இறைத்தூதர் அவர்களே! அவை எவை?" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,

  1. "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது
  2. சூனியம் செய்வது
  3. நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வது
  4. வட்டி உண்பது
  5. அனாதைகளின் செல்வத்தை உண்பது
  6. போரின்போது புறமுதுகு காட்டி ஓடுவது
  7. அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின்மீது அவதூறு கூறுவது"

என்று (பதில்) கூறினார்கள். - அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி); புகாரீ 2766.

இப்படி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெறுக்கின்ற வட்டியின் பக்கம் நாம் போகலாமா?

"பிறரிடம் உதவி கேட்டால் தர மறுக்கிறார்கள். வட்டியில்லா கடனும் கொடுக்க மறுக்கிறார்கள். பிறகு என்னதான் செய்வது? வட்டிக்குத்தான் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது" என்று சிலர் கூறுகிறார்கள். செலவழிக்கப் பணம் இல்லாவிட்டால் வட்டிக்குப் பணம் கிடைக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டு வட்டியின் பக்கம் போகிறோம். வட்டி என்பதே கிடையாது என்று நினைத்தால் போவோமா? சற்றுச் சிந்தியுங்கள். தங்களது ஆடம்பரச் செலவுகளுக்கும் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிறர் பார்த்து மெச்சுவதற்காக ஊராருக்கு விருந்து போடுவதற்கும் வட்டிக்குப் பணம் வாங்கும் எத்தனையோ பேர் நம் சமுதாயத்திலும் உள்ளனர். பன்றிமாமிசம் ஹராம் என்று எல்லோருக்கும் தெரியும். எந்த அளவு பசியிருந்தாலும் பன்றி மாமிசத்தை உண்ண மாட்டோமல்லவா. உணவு எதுவும் கிடைக்காத, உயிர்போகும் பட்சதில் பன்றி மாமிசத்தை உண்ணலாம் என்று சலுகை இருந்தும் நாம் உண்ண மாட்டோம். அதேபோன்றே இந்த வட்டியையும் ஒரு பன்றி மாமிசமாகக் கருத வேண்டும்.

ஏனெனில் இந்த வட்டியின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் எத்தனை? தனது கற்பைப் பறிகொடுத்த பெண்கள் எத்தனை? தம் பெற்றோர், பிள்ளைகள், உறவினர்களை இழந்தோர் எத்தனை? இவை யாவற்றையும் கணக்கிட முடியாது. அந்த அளவிற்கு இந்த வட்டியின் கொடுமை தலை விரித்தாடுகிறது. வட்டிக்காகப் பணம் கொடுப்பது, வட்டிக்குப் பணம் வாங்குவது மட்டுமல்ல, அதற்காக சாட்சிக் கையெழுத்துப் போடுவதும் பாவமேயாகும். அதற்கு மறுமையில் மிகப்பெரும் வேதனை மட்டுமல்ல, நிரந்தர நரகமும் உண்டு.

இதைப்பற்றி அல்லாஹ் ன் திருமறையில்,

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழமாட்டார்கள். அதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதேஎன்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது. என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:275) என்று எச்சரிக்கிறான்.

இன்னும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். என்னிடம் வந்தவர்கள் தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக் கொண்டு நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது, அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! "அவர் யார்?" என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள், "ஆற்றில் நீங்கள் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!" எனக் கூறினார்கள். - அறிவிப்பாளர் : ஸமுரா (ரலி); புகாரீ 2085.

எனவே அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே,

நம்மில் வசதியுள்ளவர்கள் ஏழ்மையில் உழல்வோருக்குக் கண்டிப்பாக வட்டியில்லாக் கடன் கொடுக்க முன்வர வேண்டும். வசதியற்றவர்கள் வட்டிக்காகப் பணம் வாங்குதலும், நகை அடகு வைத்தலும் செய்யாமல் இருக்க வேண்டும். வட்டியை ஒழிக்கப் போராட வேண்டும். வட்டியில்லாக் கடன் திட்டத்தை ஒவ்வொரு ஊரிலும் ஏற்படுத்த வேண்டும். அப்போது இந்த உயிர்க் கொல்லியான வட்டி, இந்த உலகை விட்டு ஒழியும், இன்ஷா அல்லாஹ்.

நிச்சயமாக நல்லது செய்வோருக்கு அல்லாஹ் எப்போதும் துணையிருப்பான்.

ஆக்கம் - ஹாஜிரா தாஜுன், நவி மும்பை.

http://www.satyamargam.com/